பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/772

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

707

இந்தியா

குரோமியம் : குரோமியத்தின் முக்கியத் தாதுவான குரோமைட்டு பீகாரிலுள்ள சிங்கபூமி ஜில்லாவிலும், ஒரிஸ்ஸாவிலுள்ள கியோன்ஜாரிலும், கிருஷ்ணா, சேலம், மாவட்டங்களிலும், பம்பாயிலுள்ள இரத்தினகிரியிலும், மைசூரிலும் காணப்படுகிறது. ஆண்டுதோறும் உற்பத்தி சுமார் 3000 டன்.

வனேடியம்: சிங்கபூமி, மயூரபஞ்சுப் பிரதேசங்களிலுள்ள மாக்னடைட்டுத் தாதுக்களில் ஏழு அல்லது எட்டுச் சதவீதம் வனேடியம் காணப்படுகிறது. இது இலட்சக்கணக்கான டன் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.

மற்ற உலோகங்கள் : மற்ற உலோகங்கள் மிகச் சிறிய அளவே காணப்படுகின்றன. நிக்கல் ராஜஸ்தானிலும், கோபால்ட்டு நேபாளத்திலும், மாலிப்டினம் தென்னிந்தியாவிலும், டங்ஸ்டன் சிங்கபூமியிலும், வெள்ளீயம் ஹாசிரிபாகிலும், யுரேனியம் பீகாரிலும் ராஜஸ்தானிலும், தோரியம் திருவிதாங்கூர்க் கடல் மணலிலும் காணப்படுகின்றன.

உலோகமல்லாத தாதுக்கள் : கல்நார்: இது கடப்பை, பீகார், ராஜஸ்தான், மைசூர்ப் பகுதிகளில் கிடைக்கிறது. ஆண்டுக்குச் சுமார் 200 முதல் 400 டன் வரை எடுக்கப்படுகிறது.

கட்டடக் கற்கள் : கருங்கல் பாறை, நீலக் கருங்கல், சலவைக்கல், பலகைக்கல் முதலிய பலவகை உயர்ந்த ரகக் கட்டடக் கற்கள் நாட்டின் பல இடங்களில் காணப்படுகின்றன. பண்டைக்காலமுதல் அவை பயன்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் பெறக்கூடிய கற்கள் தயாராகின்றன.

களிமண் வகைகள் : ஏராளமாகக் காணப்பட்ட போதிலும் சரிவர ஆராயப்படவில்லை. சீனக்களிமண் திருவிதாங்கூர், தென்னார்க்காடு, மலையாளம், பீகார்ப் பகுதிகளிலும், வெண்களிமண் கடப்பை, கர்நூல், பம்பாய், பீகார் ஆகிய இடங்களிலும், விசேஷ ரகக் களி மண்கள் ராஜஸ்தானிலும் காச்மீரத்திலும் காணப்படுகின்றன.

குருந்தக்கல் : பொருள்களைத் தேய்த்துப் பளபளப்பாக்கப் பயனாவதும், பளிங்குபோன்றிருக்கும்போது நவரத்தினங்களில் ஒன்றாயிருப்பதுமான குருந்தக்கல் சென்னை, மைசூர், அஸ்ஸாம் முதலியவிடங்களில் காணப்படுகின்றது. இதன் ஆண்டு உற்பத்தி சுமார் 200 முதல் 300 டன் வரை.

வைரம் முன்னாளில் கிருஷ்ணா, துங்கபத்திரா பிரதேசங்களில் அதிகமாக எடுக்கப்பட்டு வந்தது. இப்பொழுது பந்தல்கண்டிலுள்ள பன்னா என்ற இடத்தில் மட்டுமே இந்தத் தொழில் நடைபெறுகிறது.

பென்சில் கரி திருவிதாங்கூர், கிழக்குத் தொடர்ச்சி மலை, ஒரிஸ்ஸா, ராஜபுதனம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. ஆண்டு உற்பத்தி 1,000 டன்.

சிலாசத்து கட்சு, ராஜஸ்தானம், சென்னை, இமய மலை அடிவாரம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கந்த காமிலத் தயாரிப்பிலும், சிமென்டு செய்யவும் இது பயன்படுகிறது.

சுண்ணாம்புக்கல்லும் டாலமைட்டும் இந்தியாவின் தேவைகளுக்குப் போதிய அளவு காணப்படுகின்றன. ஆண்டு உற்பத்தி அரைக் கோடி டன். உலோக வேலையில் இளக்கியாகவும், கட்டட வேலைக்கும், சிமென்டு செய்யவும், வெளுக்கும் தூள் போன்ற ரசாயனப் பொருள்களின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன.

கயனைட்டு, சிலிமனைட்டு மத்தியப் பிரதேசம், மத்திய பாரதம், பீகார் பிரதேசங்களில் கிடைக்கின்றன. அஸ்ஸாமிலுள்ள காசி மலைகளில் சிலிமனைட்டு ஏராளமென்று தெரிகிறது. ஆண்டுதோறும் பீகார் 20,000 டன் ஏற்றுமதி செய்கிறது. உயர்ந்தரகப் பீங்கான் செய்யவும், கண்ணாடித் தொழிலிலும் இவை பயன்படுகின்றன.

அப்பிரகம் : உலகத்திலேயே இந்தியாவில்தான் தகட்டு அப்பிரகம் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. பீகார், சென்னை, ராஜபுதனம் ஆகியவை முக்கியமான உற்பத்தித்தலங்கள். ஆண்டு உற்பத்தி 5,000 டன்.

பாஸ்பேட்டு : சிங்கபூமியில் செம்பு கிடைக்கும் பகுதிகளில் ஆப்படைட்டு என்னும் தாதுவாகவும், திருச்சி மாவட்டங்களில் சிறுமுடிச்சுக்களாகவும் கிடைக்கிறது.

உப்பு : ராஜஸ்தான் ஏரிகளிலிருந்தும் கடல்நீரிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஆண்டு உற்பத்தி 12,50.000 டன்.

மாக்கல் ஜயப்பூர், ஜபல்பூர், கர்நூல் ஆகியவிடங்களில் கிடைக்கிறது. மட்டரகம் பல பகுதிகளில் உள்ளது. பலப்பம் செய்யவும், பாத்திரங்கள் செய்யவும், செதுக்கு வேலைக்கும் மாக்கல் பயன்படுகிறது. தூய நிலையிலுள்ள மாக்கல்லின் தூள் அலங்காரப் பொருள்களில் பயன்படுகிறது.

கந்தகம் : தனிக் கந்தகமாக மசூலிப்பட்டினத்தருகில் கடற்கரையில் படிந்துள்ள கந்தகப்புலம் ஒன்றில் காணப்படுகிறது. கந்தகக்கல் என்ற கந்தகத்தாது சிம்லா மலையிலும் பீகாரிலும் காணப்படுகிறது. மொத்த அளவு மிகமிகக் குறைவு.

தென்னிந்தியத் தாதுக்கள் : தென்னிந்தியாவின் பெரும்பகுதி கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய யுகத்தைச் சேர்ந்த பழையபாறைகளால் ஆனது. மைசூர், தென்மேற்கு ஐதராபாத் போன்ற சில பகுதிகளில் அக்கினிப் பாறைகள் சில தாதுக்களைக் கொண்ட வண்டல் படிவுகளைப் பட்டைகளாக உட்செலுத்தியுள்ளன. கடப்பைப் பகுதியில் உருமாறாத வண்டற் படிவுகள் காணப்படுகின்றன. கடற்கரையோரங்களில் கிரிடேஷஸ் காலத்தின் படிவுகளும், மூன்றாம் புவியுகத்தின் படிவுகளும் உள்ளன.

தென்னிந்தியாவில் நிலக்கரி மிகக் குறைவாகவே கிடைக்கிறது. கோதாவரிப் பள்ளத்தாக்கில் கிடைக்கத்தக்க நிலக்கரியின் அளவை இன்னும் சரிவர அறியவில்லை. சிங்கரேணியிலும், கொத்தகூடத்திலும் உள்ள புலங்களில் தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. கோதாவரியின் இரு கரைகளிலும் உள்ள பத்திராசலம், போளாவரம் பிரிவுகளில் நிலக்கரி கிடைக்கக்கூடும். இப் பகுதிகளில் 2,000 அடியிலிருந்து 3,000 அடி ஆழத்திற்குள் உயர்தர நிலக்கரி கிடைக்கிறதா என ஆராயவேண்டும்.

தென்னார்க்காடு மாவட்டத்தில் லிக்னைட்டு கிடைப்பது மேலே கூறப்பட்டது. நீரையுடைய மூன்றாம் புவி யுகத்துமணற்பாறைகளில் இது காணப்படுகிறது. புதுச்சேரியினருகே 27லிருந்து 50 அடி ஆழமும், சுமார் 3 சதுர மைல் பரப்புமுள்ள லிக்னைட்டுப் புலமொன்றை ஒரு பிரெஞ்சுக்காரர் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தார். விருத்தாசலத்திற்கருகே உள்ள நெய்வேலியில் சராசரி 25 அடி ஆழமும் 20 சதுரமைல் பரப்புமுள்ள இன்னொரு புலமும் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது.

லிக்னைட்டிலுள்ள ஈரத்தையும், ஆவியாகும் பொருள்களையும் அகற்றி, அதைக் கட்டியாக்கி நிலக்கரியைப் போலவே பயன்படுத்தலாம்.

கிழக்குக் கோதாவரியிலுள்ள ராசோல் என்னும் இடத்திற்கருகிலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள சீகாழியிலும் புவியில் தோண்டப்பட்ட கிணற்றுக்-