பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/796

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துஸ்தானி இசை

731

இந்துஸ்தானி இசை

சோட்டி கெயால்கள் என்ற சிறு பாட்டுக்கள் இன்னும் துரிதமாகப் பாடப்பெறுகின்றன. அமீர் குஸ்ரு (1296-1315) இவ்வகைப் பாட்டுக்களுக்கு ஆதி காரணராவார். இந்து பஜன்களைப் பாரசீக நடைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இது பெறப்பட்டது. இது விரைவாகவும் நீளமாகவும் உள்ள பகுதிகளில் பல ஆரோகண அவரோகணங்களும், பாட்டின் கருத்தை அறிவுறுத்தும் கூட்டிசைப் பகுதிகளும் கொண்டது. பிற்காலத்தில், மத சம்பந்தமான பொருளையுடைய பாட்டுக்களுக்குப் பதிலாகக் காதற் பாட்டுக்கள் தோன்றின. இவற்றை இன்னும் துரிதமாகப் பாடத் தொடங்கினார்கள். இதைப் பாடுபவன் தானம் பாடும் திறமையையும், லயக் கட்டுப்பாட்டையும் தெளிவாக வெளிக்காட்ட ஏற்றவாறு இது அமைந்திருக்கும்.

தற்காலத்தில் கெயால்கள் நான்கு வகைகளில் பாடப்பெறுகின்றன. பயாஸ்கான் என்பவரது நடை ஆக்ராகுவாலியர் வகை எனப்படும். இது முதலிலிருந்து கடைசிவரை தானத்தினால் கட்டுப்பட்டிருக்கும். குலாம் அலி பஞ்சாப் வகையைக் கையாளுகிறார். இது அப்பிரதேசத்தில் வழங்கும் முறையைப் பின்பற்றியது. காலஞ்சென்ற அப்துல் கரீம்கான் கிரானா வகையைப் பின்பற்றி வந்தார். தற்காலத்தில் ஹீராபாய் பரோட்கர் என்ற பெண்மணி இம் முறையைப் பின்பற்றுகிறார். அல்லாதியாகான் பின்பற்றிய முறையைக் கேசர்பாய் கையாள்கிறார். அப்துல் கரீம் கானின் முறையில் சுரங்கள் அடர்ந்திராது நேர்த்தியாக அமைந்திருக்கும். இசையொலியினால் அமைக்கப்படும் தாஜ்மகால் என இதை விவரிக்கலாம். அல்லாதியாகானின் முறையில் ஒரு சுரம் அடுத்த சுரத்தை எளிதாகவும் திருத்தமாவும் பின்பற்றி வருகிறது. இதில் முஸ்லிம் பண்பாட்டின் சிறப்பியல்புகளான சீரான வடிவமைப்பு இந்தியப் பண்பாட்டின் சிறப்பான அமிசமான நேர்த்தியான அலங்காரங்களுடன் இணைந்திருக்கும்.

டும்ரி என்ற உருப்படிவகை மேற்கூறியவற்றைப் போன்ற ஆழ்ந்த கருத்துக்கள் அற்றது. இது காதல், பிரிவு, ஊடல் முதலியவற்றைப் பொருளாகக் கொண்டது. மாண்டு, காம்போதி, சோகினி போன்ற சில இராகங்களே இதில் பயன்படுகின்றன. இதைப் பாடுகையில் இதன் மெட்டுக்களை எவ்வளவு முறை வேண்டுமானாலும் மாற்றிப் பாடலாம். பாட்டின் ஒவ்வொரு சொல்லிற்கும் பல பொருள்கள் தோன்றும் வகையில் இதைப் பாடுவது இதன் சிறப்பியல்பாகும். இதை இரு வகைகளில் பாடுகிறார்கள். லக்னௌ, டெல்லி முறை தூயதும் எளியதும் ஆகும். காசி முறை அப்பிரதேசத்தில் கார்காலத்திலும் வேனிற்காலத்திலும் வழங்கும் நாடோடிப் பாட்டு வகைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தானத்துடன் இதை முடிப்பது வழக்கம். இதில் அஸ்தாயி, அந்தரம் என்ற இரு பகுதிகளே உண்டு. அவற்றிலும் இரண்டாவதை விரிவாகப் பாடுவதில்லை.

தாத்ரா என்ற உருப்படிவகை நடையிலும் பொருளிலும் டுமரியை ஒத்தது. ஆனால் இது தாத்ரா தாளத்தில் பாடப்பெறுவதால் இப்பெயர் பெற்றது. டப்பா என்பது பஞ்சாபிலுள்ள ஒட்டகமோட்டிகளின் பாட்டிலிருந்து தோன்றியது. டும்ரி இசையை ஆதரித்து வளர்த்த அயோத்தி நவாபின் ஆஸ்தானத்தில் வாழ்ந்த மியாஷோரி என்பவர் இப்பாட்டின் தற்கால வடிவிற்குக் காரணராவார். இப்பாட்டில் காதலுக்காகத் தம் உயிரை மாய்த்துக்கொண்ட சசி, புன்னு என்ற காதலர்களின் கதை, பஞ்சாப் மொழியில் விவரிக்கப்படுகிறது. பைரவி, சிந்து, மாண்டு, காம்போதி போன்ற எளிய இராகங்களில் பல அலங்காரங்களுடன் இசை இயற்றப்படுகின்றது. சோட்டி கெயால்களில் பயனாகும் தாளங்களில் இவை மத்திய காலத்தில் பாடப்பெறுகின்றன. இவற்றில் அஸ்தாயி, அந்தரம் என்ற இரு பகுதிகள் உண்டு. சுரங்களைப் பல்வேறு வகைகளில் இணைத்தும் தொகுத்தும் பாடுவது இதன் சிறப்பியல்பாகும். இத்தகைய சுரத் தொகுதிகளைப் பாடுதல் தானம் எனப்படும்.

கஜல் என்பது பிற்காலத்தில் தோன்றிப் பாமர மக்களிடையே வழங்கிய பாட்டுவகை.

சர்கம் என்பது சுரங்களைத் தாளத்துடன் பாடுவது. தரானா என்பது ஆலாபனையை இராக தாளங்களுடன் பாடுவது. கருநாடக இசையில் வழங்கும் தில்லானா இதிலிருந்து தோன்றியதே.

மிருதங்கம், தபலா போன்ற கருவிகளின் சொற்கட்டுக்களை இராக தாளங்களுடன் பாடுவது திரிபாத் எனப்படும்.

சதுரங்கம் என்பது வெவ்வேறு வகையான நான்கு பாட்டு வகைகளைக் கொண்டது. கெயால், தரானா, சர்கம், துருபதம் ஆகிய பாட்டு வகைகள் இதன் நான்கு பகுதிகளாக இருக்கும்.

பக்திரசப் பாடல்களிலும், மத சம்பந்தமான பாட்டுக்களிலும் கீர்த்தனங்களும் பஜன்களும் முக்கியமானவை. பக்திரசப் பதாவளிகளை இயற்றிப் புகழ் பெற்றவர்களில் சூர்தாஸ், வித்யாபதி, சண்டிதாஸ், துளசிதாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

வடநாட்டில் வழக்கத்திலுள்ள கருவி இசையையும் குரலிசையையும் வளர்த்தவர் அக்பரது ஆஸ்தானக் கலைஞரான தான்சேனும் அவருடைய சந்ததியாருமே ஆவர். தான்சேனுடைய மாப்பிள்ளையான நவுபத்கான் வடநாட்டில் வழங்கும் கச்சபி வீணை வாசிப்பதில் வல்லவர். டெல்லி சுல்தான் முகம்மது ஷாவின் காலத்தில் மற்றொரு நவுபத்கான் இருந்தார். இவர் வீணை வாசிப்பதில் புகழ் மிக்கு விளங்கியதோடு, சுமார் 7,000 கெயால் உருப்படிகளும், பல துருபத, ஹோரி-தமார் உருப்படிகளையும் இயற்றினார். இவர் இயற்றிய கெயால்களைப்போல் வேறொருவருமே இயற்ற இயலவில்லை. இவருடைய மகனான் ஆதாரங்கு என்பவரும் இவருடைய கெயால்களைப் போன்ற பல பாட்டுக்களை இயற்றினார்.

தான்சேனது வமிசத்தில் வந்த அமிர்தசேன் என்பவர் அமீர் குஸ்ரு அமைத்த சிதாரைத் திருத்தியமைத்து, அதை வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். இவரது குடும்பத்தில் பிறந்த மசீத்கான் இதை வாசிக்கத் தனிப்பட்ட முறையொன்றை வகுத்தார். இக் குடும்பத்தின் மாணவரான ரஜாகான் என்பவர் துரிதமாக இதை வாசிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இம்தாத்கான் என்பவர் இதைச் சீர்திருத்தியமைத்து, வட இந்திய தந்திக் கருவிகளை வாசிக்கும் முறைக்கே வழிகாட்டியாக விளங்குகிறார்.

தென்னாட்டைப் போலவே வடநாட்டிலும் உயர்ந்த இசை மரபுகளும், சிறப்பான இசை நடைகளும் காலப்போக்கில் வீழ்ச்சியுற்றன. தான்சேன் வழி வந்தவர்கள் துருபதத்தைப் பழைய முறையில் பாடும் வழக்கத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். அண்மையில் துருபதம் பாடுவதில் புகழ் பெற்றவர்கள் ஜாகிருதீன்கான், அல்லாபந்தேகான் என்ற சகோதரர்களும், நாசிருதீன் கான், கராமத்கான், ராதிகா கோஸ்வாமி ஆகியோரும் ஆவர். வீணையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் பந்தேகான், வாசிர்கான், தபீர்கான், சாதிக் அலிகான் முதலி-