பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பை மாகாளம்

93

இருமைக் கொள்கை

அதை ஏற்றவாறு வெப்பவினைக்கு உட்படுத்தவேண்டும். ஆனால் குறிப்பிட்டதோர் அளவிற்கும் மேற்பட்ட உறுப்புக்களைச் செய்யவும் வலிவான உறுப்புக்களைத் தயாரிக்கவும் எஃகின் கலவைகளே ஏற்றவை.

ஒரு வேலைக்கு இத்தகைய எஃகு தான் ஏற்றது என்று திட்டமாகவரையறுத்துவிடமுடியாது.கிரயம், தயாரிப்பு முறை முதலிய பல விஷயங்களையும் மனத்திற் கொண்டே அதை நிருணயிக்கலாம். அதிலும் அது எந்நிலையில் பயன்படப்போகிறது என்பதை நாம் முக்கியமாகக் கருதிப் பார்க்கவேண்டும். குறிப்பிட்டதொரு வேலைக்குக் கரி கலந்த எஃகு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அதை மிகப்பெரியதாகவோ, சிககலான அமைப்புள்ள தாகவோ தயாரிக்கவேண்டி இருந்தால் சாதாரண எஃகிற்குப் பதிலாகக் கலவை எஃகையே பயன்படுத்த நேரும். மை. இ .எ .தொ

இரும்பை மாகாளம் புதுச்சேரிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது. மாகாளர் தலம், பங்குனி உத்தரத்தில் முருகப்பெருமானுக்குக் காவடி யெடுக்கின்றனர். சுவாமி மாகாளேசுரர். அம்மன் குயில் மொழியம்மை. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. இவ்வூருக்கு 3 மைலில் அரசிலி என்னும் தலம் இருக்கிறது.

இருமல்: சுவாசப்பைக் குழாயிலுள்ள கபத்தையோ அல்லது அங்கு வந்து சேர்ந்த பிற பொருளையோ அப்புறப்படுத்துவதற்காக உடல் மேற்கொள்ளும் செயலே இருமல் என்பது. சுவாசப்பைகளையும் அது சம்பந்தமான குழாய்களையும் சுத்தமாக வைத் திருப்பதற்காக உண்டாகும் இருமல் உடல் நலத்ததே. ஆனால் மற்ற விதமாக உண்டாகும் இருமல்கள் எல்லாம் தீயனவே. இருமல் நீண்ட காலம் மிகுதியாக உண்டாகுமானால் மார்புத் தசைகளிலும், வயிற்றுத் தசைகளிலும் புண்ணுற்றதுபோல் நோய் உண்டாகும். சுவாசப்பைகளும் இருதயமும் வலிமையற்றிருப்பின் அவை இருமலால் பழுதடையும். சிறு குழந்தைகளாயிருந்தால் குடல் இறக்கம் (Hernia) உண்டாகலாம். க்ஷயரோகிகளாயிருந்தால் இரத்தக் குழாய்கள் வெடித்துப் போகலாம். சிகிச்சை இருவகைப்படும்: 1. உள்ளே புகுந்த பிற பொருள்களை அப்புறப்படுத்தல், 2. இருமல் உண்டாகும் நரம்புகளை ஆற்றல். முதல் சிகிச்சை முறையில் வாந்தி (Emetics) மருந்துகளும், இரண்டாவது சிகிச்சை முறையில் ஆற்றி மருந்துகளும் (Sedatives) பயன்படும்.

இருமைக் கொள்கை (Dualism) : பிரபஞ்சம் எதனால் ஆக்கப் பெற்றுள்ளதோ, அதன் தன்மையை ஆராயத் தொடங்கிய காலமே தத்துவ விசாரணையின் வைகறையாகும். அதன் காரணமாகக் கீழ் நாட்டிலும் மேல் நாட்டிலும் பல கொள்கைகள் எழுந்தன. பிரபஞ்சமானது ஒன்று. இரண்டு, அல்லது பல மூலப் பொருள்களிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என்னும் நம்பிக்கையே இந்தக் கொள்கைகளின் அடி நிலை மூலப் பொருள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருமைக்கொள்கை (Monism), இருமைக் கொள்கை, பன்மைக் கொள்கை (Pluralism) என்னும் மூன்று தத்துவக் கொள்கைகள் காணப்படுகின்றன.

சடப்பொருளோ, மனப்பொருளோ, எதுவாயினும் ஒரே ஒரு மூலப்பொருளே உண்டு என்று கூறுவது ஒருமைக் கொள்கை, ஒன்றுக்கொன்று முரணான இரண்டு மூலப்பொருள்கள் உண்டு என்று இருமைக்கொள்கை கூறுகிறது. ஒன்றுமன்று, இரண்டுமன்று; பல மூலப் பொருள்கள் உண்டு என்று கூறுவது பன்மைக் கொள்கை. இந்த மூலப்பொருள்கள் சடப் பொருள்களாகவுமிருக்கலாம், மனப்பொருளாகவு மிருக்கலாம் என்றும் அது கூறுகிறது.

நம்முடைய அனுபவமெல்லாம் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பொருள் அனுபவமாகவே இருக்கிறது என்று இருமைக்கொள்கை கூறுகிறது. மனிதனானவன் சடம், மனம் என்னும் இரண்டும் சேர்ந்த ஒரு பொருளாவான். இதுபோலவே மனிதனுடைய அறிவும், மனிதன் அறியும் பொருளும் என்ற ஓர் இருமையும் உள்ளது. கடவுள், சாத்தான் என்ற இருமையை மதமும், நன்மை தீமை என்ற இருமையை அறநூலும் கூறுகின்றன.

இவ்வாறு நம்முடைய அனுபவத்தில் காணப்படும் இருமைகளின் முரண்பாடுகளை விடுவிக்க முயல்வதையே இருமை கொள்கையின் வரலாறு கூறுகிறது.

இருமைக் கொள்கை முதன் முதல் காணப்பட்டது சமயக் கொள்கையிலே யாகும். சாத்தானும் கடவுளுடனே தோன்றிக் கடவுளைப்போலவே அழியாப் பொருளாக உளன் என்று கிறிஸ்தவ சமயக்கொள்கை கூறுகிறது. இந்தக் கருத்து நாளடைவில் வேறுவேறு பொருள் பெற்று, ஆத்மிகம், இலௌகிகம் என்ற இருமைக்கொள்கை ஆயிற்று. ஆத்மிகம் கடவுளையும் நன்மையையும் குறிக்கும்: இலெளக்கம் சாத்தானையும் தீமையையும் குறிக்கும். இதன் காரணமாக எழுந்ததே துறவறக்கொள்கை. துறவிகள் இலௌகிக வாழ்க்கையைத் தீமையாக எண்ணி, அதைத் துறந்து வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருமைக் கொள்கைக்குத் தத்துவப் பொருள் தரப்பட்டது. சடம் அல்லது உடலும், மனம் அல்லது அன்மாவும் முற்றிலும் வேறுபட்ட பொருள் களாகக் கருதப்பெற்றன. இக்கருத்தேதான் இருமைக் கொள்கைக்கு இப்பொழுதுள்ள பொருள்.

மேனாட்டில் இந்தத் தத்துவக் கருத்தில் இருமைக் கொள்கையை முதன் முதலாகக் கூறியவர் பண்டைக் கிரேக்கத் தத்துவ சாஸ்திரி ஆனாக்சகோரஸ் என்பவராவர். உடலையும் உள்ளத்தையும் வேறுவேறு பொருளாக முதன் முதல் கருதியவர் அவர் தாம். அவர் காலத்திருந்தவரும் அணுக் கொள்கையை முதன் முதலாகக் கூறியவருமான டெமோக்கிரிட்டஸ் என்பவர் இந்த இருமைக் கொள்கைக்கு ஆதரவு அளித்தார்.

அடுத்த பெரிய இருமைக்கொள்கையர் பிளேட்டோ ஆவர். அவருடைய இருமைக் கொள்கையானது கருத்துக்கள் பற்றிய கொள்கையிலே உற்பத்தியாயிற்று. கருத்துக்களே உண்மையான உள்பொருள்கள் என்பதும் அந்த நித்தியமான கருத்துக்களின் புறத்தோற்றமே புலன்களால் அறியப்படும் சடமாகிய உலகம் என்பதும் அவருடைய கருத்து.

பிளேட்டோவின் புகழ்வாய்ந்த மாணவரான அரிஸ்டாட்டில், பிளேட்டோ கூறும் கருத்துக்கள் என்னும் பொருள் அனுபவத்துக்கு எட்டாதவை என்று ஏற்றுக் கொள்ளாமல், சடம்,உருவம் என்ற இருமைக் கொள்கையைக் கூறுகிறார். நம்முடைய அனுபவம் எல்லாம் சடம் பற்றிய தென்றும், அதில் நிறைந்து நிற்கும் பொது உருவத்தையே நாம் அறிகிறோம் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு இருமைக்கொள்கை பண்டைக் கிரேக்கத் தத்துவ சாஸ்திரிகளிடம் காணப்பட்டபோதிலும் கணிதத் தத்துவ சாஸ்திரியான டேக்கார்ட் என்பவரே மனம் - சடம் என்ற இருமைக் கொள்கைக்கு உறுதியான அடிநிலை அமைத்தவர். அவரே தத்துவ சாஸ்திர ஆராய்ச்சிக்கும் விஞ்ஞான முறைகளைக் கையாண்டவர்.