பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண்

98

இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண்

வலி ஏற்படும். உலக யுத்தங்கள் இரண்டிலும் வீரர்களுக்கு இந்த நோய் அதிகமாகக் காணப்பட்டது. காரணம் என்னவென்றால் சரியான வேளைகளில் சாப்பாடு இல்லாமையும், உயிருக்கும் உடலுக்கும் என்ன கெடுதல் ஏற்படுமோ என்னும் அச்சமுமே. பரீட்சைச் சமயங்களில் மாணக்கர்களுக்கும் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம் மனக்கவலையே.

இந்தப் புண்ணிருப்பதனால் இரத்தக் குழாய்கள் மெலிந்து, அவைகளில் துவாரம் ஏற்பட்டு இரத்தம் வெளியே வரும். இம்மாதிரியாக இரைப்பையில் ஏற்பட்டால் இரத்தம் வாந்தியாகும். குடலில் ஏற்பட்டால் அநேகமாக வாந்தியாகாமல் இரத்தத்தின் நிறம் மாறிக் கருநிறமாக மலத்துடன் வெளிவரும். சில சமயங்களில் இரைப்பைபிலேயே துவாரம் ஏற்பட்டு, இரைப்பையிலும் குடலிலும் இருக்கும் உணவு அவற்றிற்குப் புறம்பே வயிற்றறைக்குள் வரலாம். அப்படி நேரிட்டால் உடனே இரண வைத்தியரைக்கொண்டு ஆப்பரேஷன் செய்தால்தான் உயிர் பிழைக்கலாம். அம்மாதிரி துவாரம் ஏற்பட்டு, 6 அல்லது 8 மணி நேரத்திற்குள்ளேயே ஆப்பரேஷன் செய்தால்தான் நிச்சயமாகக் குணமாகும். நேரம் கழித்து ஆப்பரேஷன் செய்தாலும் பிழைப்பது அரிது. குடலில் புண்ணிருப்பது சில சமயங்களில் ஆராமல், குடலில் உண்டாகும் வலி மிகுதியால் குடல் திடீரென்று சுருங்கி மூடிக்கொள்ளலாம். அப்படி மூடிக்கொள்ளுமாயின் உணவு வாந்தியாகும். முன்சொன்ன புண்ணில் துவாரம் ஏற்படும்பொழுதுகூட இம்மாதிரியாக உணவு வாந்தியாகலாம். உணவு வாந்தியாவது மட்டும் அன்று; இரைப்பையின் மேல்பாகத்தில் தசைகளும் பலகைபோல் கெட்டியாகி விடுகின்றன. வயிற்றின்மேல் கையை வைத்துப் பார்த்தால் பலகையின்மேல் கையை வைப்பதுபோல் இருக்கும். குடலில் சில சமயங்களில் புண் ஆறிவிட்டாலும் வடு குறுகுவதால் குடலையும் குறுகச்செய்கின்றது. அதனால் உணவு உள்ளே செல்லாது. இப்படிப் புண் ஆறியும் குடல் குறுகினால் உணவு இரைப்பையிலிருந்து முன் சிறுகுடலுக்குச் செல்லாமல் இடைச் சிறுகுடலுக்கே (Jejunum) நேராகச் செல்லும்படி ஆப்பரேஷன் மூலம் செய்துவிடுகிறார்கள். புண் ஆறாமல் இருக்கும் பொழுது குடல் குறுகுமானால் மருந்து கொடுத்தாலே குணமாகிவிடும்.

புண், புற்றுப் புண்ணாக மாறுமென்ற சந்தேகம் இருந்தாலும் ஆப்பரேஷன் செய்யவேண்டியது அவசியம். புண் வெளிப் பாகங்களோடு சேருமாயினும் ஆப்பரேஷன் செய்யவேண்டும். இந்த நோயாளிகளைப் பரிசோதிக்கும்பொழுது இரைப்பையில் புண்ணிருப்பவர்களுக்கு இரைப்பைக்கு மேலுள்ள வயிற்றின் பாகத்தில் கைவைக்கும்பொழுது வலி ஏற்படும். குடலில் புண்ணிருப்பவர்களுக்கு இரைப்பைக்கு வலப்பக்கத்திலுள்ள வயிற்றின்மேல் கைவைக்கும்பொழுது வலி ஏற்படும்.

நோய்க்கூறு : நோயாளி சொல்லும் குறைகளில் இருந்தே இரைப்பையில் புண்ணா, குடலில் புண்ணா என்று கண்டுபிடிக்க இயலுகிறது. இருந்தாலும் பல காரணங்களினால் வயிற்றில் வலி ஏற்படுவதால் இது இரைப்பை அல்லது சிறுகுடற் புண்தான் என்று கண்டுபிடிப்பதற்கு முக்கியமாக இரண்டு பரீட்சைகள் செய்யவேண்டியிருக்கின்றன. முதலாவது, பேரியத்தை உண்ணக்கொடுத்து, பேரியம் எக்ஸ்-கதிர்ப் படங்கள் பிடித்தால், புண் இருந்தால் அந்த இடங்களில் பேரியம் தங்கும். அப்போது புண் இருக்கின்றது என்று ஊகித்துக்கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக இந்தப் புண்ணைக் கண்டுபிடிப்பதற்கு நோயாளியை ஒரு புறத்தில் மட்டும் எக்ஸ்-கதிர்மூலம் பார்த்தால் போதாது. இந்த மருந்து கொடுத்தவுடன் அவரைப் பல பக்கமாகவுந்திருப்பி, வயிற்றைப் பல பக்கங்களிலிருந்தும் பார்த்து, எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தால் புண் தெரிகிறதோ அந்த நிலையில் எக்ஸ்-கதிர்ப் படம் பிடித்தால் புண்ணிருப்பதைப் பிறருக்குக் காட்ட முடியும்.

இரண்டாவதாகச் சோதனை உணவு . (Test meal) கொடுத்துப் பரீட்சை செய்யலாம். அதாவது அதிகாலையில் இரைப்பையிலிருக்கும் உணவை ஒரு ரப்பர்க் குழாய் மூலமாக வெளியே எடுத்துவிட வேண்டும். அதன்பிறகு கோதுமை நொய்யினால் தயாரித்த கஞ்சி 8 அல்லது 10 அவுன்சு கொடுக்க வேண்டும். ¼ மணி நேரத்திற்கு ஒருமுறை உண்ட கஞ்சியை வயிற்றிலிருந்து எடுக்க வேண்டும். எடுத்து, அமிலம் எவ்வளவு இருக்கிறதென்று பரீட்சை செய்யவேண்டும். அப்படிச் செய்யும்பொழுது வயிற்றுவலி உள்ளவர்களுக்கு அமிலம் சாதாரணமாக இருக்கும். அல்லது சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆனால் குடலில் புண்ணிருந்தால் அமிலம் அதிகமாகவே காணப்படும்.

முதுகெலும்பு நோய்களினாலும் வலி ஏற்படலாம். கல்லீரல் நோய்களினாலும் வலி ஏற்படலாம். பித்தநீர்ப்பையின் நோய்களினாலும் வலி ஏற்படலாம். இன்னும் வயிற்றிலிருக்கும் பல உறுப்புக்கள் காரணமாகவும் வலி ஏற்படலாம். ஆனால் இவைகளிலெலாம் உணவு உட்கொள்வதற்கும் வலி வருவதற்கும் ஒருவித சம்பந்தமும் இராது. மேலும் வலி வயிற்றின் மேல்பாகத்திலே மட் டுந்தான் காணப்படுகிறது. பிற உறுப்புக்களில் நோய் இருந்தாலும் அந்த நோய் வயிற்றின் மூலமாகவே வெளிப்படக் காரணமாகிறது. அதனாலேயே வயிற்றுப் புண்ணென்று நிச்சயமாகச் சொல்ல இயலாமற் போகிறது.

சிகிச்சை : முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உணவில் போதுமான அளவு புரோட்டீனும் வைட்டமின்களும் இருக்கவேண்டும் என்பது. பீடி, சிகரெட்டுப் போன்ற புகையிலைப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது. உணவை மென்று சாப்பிட வேண்டும். பல் இல்லாவிட்டாலும் பொய்ப்பற்கள் கட்டிக்கொள்ள வேண்டும். உணவை மெல்லாமல் சாப்பிடுவதே வயிற்றுத் தொந்தரவுக்கு முதற் காரணம்.

வயிற்றில் அமிலம் அதிகமாக இருப்பதால் அதைக் குறைக்கக் கூடிய பொருள்களையோ அல்லது அது ஏற்படாமல் இருக்கும்படி செய்யக் கூடிய பொருள்களையோ பயன்படுத்த வேண்டும். அதனாலேயே ஆட்ரொப்பீன் என்று சொல்லக் கூடிய மருந்தைக் கொடுக்கிறார்கள். இதைக் கொடுத்தால் வயிற்றில் அமிலம் அதிகமாக ஏற்படாது. இரைப்பையும் குடலும் குறுகா. குறுகி இருக்கும் இரைப்பையும் குடலும் அகன்று கொடுக்கும். ஆனாலும் ஆட்ரொப்பீனுக்கு அமிலத்தை முழுவதும் போக்கக்கூடிய சக்தி கிடையாது. அதனால் உணவிற்கு முன்பு ஆட்ரொப்பீன் கொடுத்துப் பிறகு பால் போன்ற உணவைக் கொடுக்கவேண்டும். மற்ற உணவுகள் போலில்லாமல் பாலில் உடம்புக்கு வேண்டிய முக்கியமான பொருள்கள் எல்லாம் இருக்கின்றன ; வைட்டமின்களும் இருக்கின்றன. மேலும் இது நீராகவும் இருக்கின்றது. இதனால் இரைப்பையில் புண்ணிருந்தாலும் பால் சாப்பிடுவதால் ஒருவிதமான தொந்தரவும் ஏற்படாது. எனினும் பால் கெட்டியாகிவிடும். இரைப்பைக்குச் சென்றதும் அப்படிக் கெட்டியாகாமல் இருப்பதற்குச்