பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்பொருட்காட்சி

100

இல்லம்

குத்புதீன் ஐபெக் டெல்லியில் அடிமை சுல்தானாக இருந்தான். இவன் அவனுடைய அடிமையும் மாப்பிள்ளையும் ஆவான். ஐபெக் 1210-ல் இறந்து போகவே. அவன் மகனான ஆராஷாவை இல்தூத்மிஷ் தோற்கடித்து, 1211-ல் தானே டெல்லி சுல்தானாகப் பட்டமெய்தினான். இவன் காலத்தில் ஆசியாவை வென்ற செங்கிஸ்கரன் என்னும் மங்கோலியன் இந்தியாவின்மீதும் படையெடுப்பானே என்னும் அச்சமிருந்தது. ஆயினும் நல்லவேளையாக அவன் சிந்து நதியைக் கடந்து வரவேயில்லை. இவ்தூத்மிஷ் 1225-ல் வங்காளத்தையும், அடுத்த ஆண்டில் ரந்தம்போரையும் கைப்பற்றினான். பாக்தாதிலிருந்த கலிப்பாவும் இவனை டெல்லி சுல்தானாக அங்கீகரித்தான். 1232-ல் இவன் குவாலியரைக் கைப்பற்றினான் ; 1234-ல் உஜ்ஜயினியும் இவன் வசமாயிற்று. இவன் ஆதரவில் இருந்த குத்புதீன் உஷ் என்னும் பக்கிரியின் நினைவுச் சின்னமாக 1281-32-ல் இவன் கட்டிய ஸ்தூபியே குதுப்-மினார் என்பது, இவன் 1236-ல் இறந்தான். தே. வெ. ம.

இல்பொருட்காட்சி (Hal1 ucin ation) : பொருள்களைப் புலன்கள் வாயிலாக அறிகிறோம்; அது புலனுணர்வாகும். அவ்வாறு புலன்கள் வாயிலாக வரும் பொருளை மனமானது சில சமயங்களில் தவறாக விளக்கம் செய்வதுண்டு. அது திரிபுக் காட்சி (Illusion) எனப்படும். பழுதையைப் பாம்பாகக் காண்பது அதற்கு உதாரணம். சில சமயங்களில் புலன்களைத் தாக்குவதற்கு யாதொரு பொருளுமில்லாதிருந்தும் பொருள் இருப்பதாகத் தோற்றம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு உண்டாகும் தோற்றம் இல்பொருட்காட்சி எனப்படும். இது ஆதாரமற்ற பொய்யான அனுபவம். திரிபுக்காட்சியில் பொருள்தூண்டல் உண்டு. இல்பொருட்காட்சியில் அது கிடையாது. இரண்டுவிதக் காட்சியிலும் காண்பதாக எண்ணும் பொருளில் உண்மையில் நம்பிக்கை ஏற்படவும் கூடும், ஏற்படாமலு மிருக்கலாம். அறிவுள்ளவர்க்கு உண்டாகும் இல்பொருட்காட்சி சிறிது காலமே நிலைக்கக்கூடியது. அவர் விரைவில் தம் பிழையை உணர்ந்து கொள்வர். வேற்றூரிலுள்ள நண்பனைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்பொழுது அவனே நேரில் வருவதாகக் காண்கிறோம். ஆயினும், உடனேயே இது வெறும் மனப் பிராந்தியே என்று தெளிந்து விடுகிறோம். அறிவு மயங்கிய பைத்தியக்காரர்களும் உளவசிய (Hypnotic) நிலையிலுள்ளவர்களும் தாம் மயக்கத்திலிருந்து தெளியாது. தாம் காண்பவை உண்மையே என்று எண்ணுகிறார்கள்.

இல்பொருட்காட்சியானது சில சமயங்களில் பல மக்களுக்கு ஒருமிக்க உண்டாவதுண்டு. அதை ஒருமித்த இல்பொருட் காட்சி (Collective h.) என்பர். இத்தாலிய நகரமொன்றில் ஒருநாள் மக்கள் திரளாகக் கூடி வானத்தைப் பார்த்து, "அதோபுனிதச் சிலுவை" என்று பேசிக்கொண்டிருந்தனர். வழியே சென்ற மஜ்ஜினி என்னும் அறிஞர்க்கு அது தோன்றவில்லை. அவர் ஒருவனைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, "எங்கே சிலுவை? சரியாய்ப் பார்" என்று எச்சரித்தார். அவன் வானத்தைப் பார்த்துவிட்டு, "ஆமாம் அங்கு ஒன்றுமில்லை" என்று பதில் உரைத்தான்.

இல்பொருட்காட்சி ஐம்பொறிகள் வழியாகவும் உண்டாகலாம். ஆயினும் கண்ணும் செவியுமே இவ்வனுபவத்திற்கு முக்கியமானவைகளாக இருக்கின்றன. இதற்குக் காரணம் இவ்விரண்டு பொறிகளையே அதிகமாகப் உபயோகிப்பதும், இவற்றின் மூலம் உண்டாகும் புலன்களே அதிகத் தெளிவாகளிருப்பதுமேயாகும். இரண்டு மூன்று பொறிகள் சம்பந்தப்படும் இல்பொருட் காட்சி உளவசிய நிலையிலுள்ளவர்களிடையேதான் அதிகமாகக் காணப்படும்.

இல்பொருட்காட்சி அனுபவம் எல்லோர்க்கும் உண்டாகக் கூடியதாயிருந்தாலும், கீழ்க்கண்ட நிலைமையிலுள்ளவர்க்கே மிகுதியாக உண்டாகும்.

1. நோயில்லாதிருப்பினும் பிறழ்வான நிலையில் (Abnormal) உள்ளவர்கள்: பளப்பளப்பான பொருளை நீண்டநேரம் பார்த்து இல்பொருட் காட்சி உண்டுபண்ணுதல் உண்டு. உதாரணம்: அஞ்சனம் போட்டுப் பார்த்தல். பசியோடிருப்பவர்கள், அபினி. கஞ்சா உபயோகிப்பவர், தூக்க மயக்கத்திலிருப்பவர்கள், பொறிக்கோளாறு உடையவர், கனவு காண்பவர், திகில் பிறந்தவர், உளவசிய நிலையிலுள்ளவர், ஆனந்த பரவசமாயிருப்பவர் ஆகிய இவர்களுக்கும் இல்பொருட்காட்சியுண்டாகும்.

2. உடல்நோய், உளநோய் உடையவர்கள்: இதயம், நுரையீரல், வயிறு ஆகிய உறுப்புக்களில் நோயுடையவர்களுக்கு இக்காட்சி அதிகமாக உண்டாவதாகவும், அப்படிப்பட்ட இல்பொருட்காட்சி நோயில்லாதவர்க்கு உண்டாகும் இல்பொருட்காட்சி போன்றிருப்பதில்லை என்பதாகவும் டாக்டர் ஹென்ரி ஷெட் கூறுகிறார். கடுமையான சுரத்தால் ஏற்படும் சன்னியுடையவர்களிடத்தும் காக்கைவலி, ஹிஸ்டிரியா போன்ற உளநோய்க் குறிகள் உடையவர்களிடத்தும்இது நிகழும்.

இல்பொருட்காட்சி அனுபவங்கள் உளநோய் சிகிச்சைக்கு நோயை நிருணயிக்கும் அறிகுறிகளாக அமைந்து உதவுகின்றன. இவைகள் உள்ளத்தின் அடித் தட்டில் உள்ள இச்சை, அச்சம் முதலியவற்றின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. உளநோயுடையவர்களிடம் அவர்களுடைய கனவு, பகற்கனவு, இல்பொருட்காட்சி முதலியவைகளைக் கேட்டு ஆராய்ந்தே உளமருத்துவர்கள் சிகிச்சை செய்கிறார்கள்.

சில சமயங்களில் வேற்றூரிலுள்ள நண்பர் இறப்பதுபோன்ற இல்பொருட்காட்சி உண்டாவதும், பிறகு விசாரிக்கும்பொழுது அவர் அதே நேரத்தில் இறந்து போயிருப்பதும் நேரிடுவதுண்டு. அத்தகைய இல்பொருட்காட்சியே 'உடனிகழ்ச்சியான இல்பொருட்காட்சி' (Coincidental h.) என்பர். இல்பொருட்காட்சி உண்டான நேரத்தில் இறந்திருப்பதானால் அதை உண்மையுள்ள இல்பொருட்காட்சி (Veridi cal h) என்றும் கூறுவர். ஆனால் சில சமயங்களில் அளவு கடந்த கவலையாலோ பயத்தாலோ இல்பொருட்காட்சி ஏற்படும்; அதற்கேற்ற நிகழ்ச்சி நேரிடாது. அப்பொழுது அதைப் பொய்யான இல்பொருட்காட்சி என்பர்.

உண்மையுள்ள இல்பொருட்காட்சிகளைத் தொலைவிலுணர்தல் (Telepathy), அதாவது உள்ளத்துக்கு உள்ளம் தந்திபோலக் கருத்துக்களை அனுப்பும் சக்தியின் உண்மைக்கு ஆதாரமாகக் கூறுவதுண்டு. ஆயினும் அத்தகைய இல்பொருட்காட்சிகளுக்கு எதிர்கால நிகழ்ச்சிகளை முன்கூட்டி அறிவிக்கும் சக்தி உண்டென்பதை உளவியற் புலவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பார்க்க: திரிபுக் காட்சி; கற்பனை. எம். எஸ். ஸ்ரீ.

இல்லம்: ஆதிமக்கள் மலைகளில் முன்னுக்கு நீட்டிக்கொண்டிருக்கும் பாறையின் அடியிலும், மலைகளில் காணப்படும் முழைஞ்சுகளிலும் காற்று முதலியவை தாக்காமல் ஒதுங்கினார்கள். இலங்கையிலுள்ள வேடர்களும், அண்மைவரை தென் மலையாளத்து அரநாடர்-