பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராம பாரதி

67

இராமலிங்க சுவாமிகள்

மாறுபாடு ஒன்றையும் அடைவதில்லை. முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு தாய்ப் பூச்சியைப் போலிருக்கும்; சில மாதங்களில் முழுப் பருவமடையும். ஜே. சா.

இராம பாரதி (19ஆம் நா.) ஆத்திசூடி வெண்பா இயற்றியவர். இது ஆத்திசூடி அறத்தை இறுதி அடி தோறும் வைத்து வெண்பாவால் பாடிய நூல். ஒவ்வொரு வெண்பாவிலும் ஒரு கதை காணப்பெறும். இவரது நூலால் இவரைச் சைவரென்றுணரலாம்.

இராம ராஜ பூஷண கவி (சு. 1750) பெனுகொண்டாவை ஆண்டுவந்த திருமலை தேவராயரின் அவைப் புலவர்; தெலுங்குப் புலவர். இவர் இசைப் பயிற்சியிலும் இசைப்பாக்கள் இயற்றுவதிலும் சிறப்புற்றவர். இவர் மூன்று நூல்கள் செய்திருக்கிறார். அவை காவியாலங்கார சங்கிரகம், வசு சரித்திரம், அரிச்சந்திர நளோபாக்கியானம். இம்மூன்றும் தெலுங்கிலக்கியத்திற் புகழ் பெற்றவை. தெலுங்கில் முதன்மையுற்ற வசு சரித்திரத்தைப் பின்பற்றித் தமிழிலும் அதே பெயரால் ஒரு நூலுள்ளது. அரிச்சந்திர நளோபாக்கியானத்தில் அரிச்சந்திரன் கதைக்கும் நளன் கதைக்கும் பொருந்துமாறு சிலேடையாகச் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. இவர் சிலேடை பாடுவதிற் சமர்த்தர்; வருணனையிலும் இவர் முதன்மை பெற்றவர். என். வெ. இவருடைய இயற் பெயர் பட்டு மூர்த்தி, இராம ராஜாவின் அவைக்களப் புலவராகையால் இராமராஜ பூஷணன் என்பதே வழக்கில் வந்துவிட்டது. இவர் இசை நூல்களும் செய்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அவை கிடைக்கவில்லை.

இராமலிங்க ஐயர் (19ஆம் நூ) யாழ்ப்பாணத்து நல்லூரிலே பிறந்தவர் ; அந்தணர் ; சந்தான தீபிகை என்னும் சோதிட நூலை யியற்றியவர். சரசோதிமாலை என்னும் நூலைப் பதிப்பித்தவர்.

இராமலிங்க சுவாமிகள் (1823-1874): இவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் தில்லைக்கு வடமேற்கில் மருதூரில் இராமைய பிள்ளையின் மனைவி சின்னம்மையாருக்கு ஐந்தாம் குழந்தையாக5-10-1823 ஞாயிறன்று தோன்றினார். படிப்பில் நாட்டமில்லாமைக்காக இவருடைய தமையனார் கடிந்தார். எனினும், ஒரு நாள் அடிகளின் தமையனார் சென்னையில் முத்தியாலுப் பேட்டையில் பெரிய புராணணச் சொற்பொழிவுக்குச் செல்ல இயலாதிருந்தபோது அடிகள் சென்று ஆற்றிய சொற்பெருக்கு மக்கள் உள்ளத்தை மிகக் கவர்ந்தது. இவர் பேருரைப் பேராற்றலைப் பற்றி எங்கும் பேசத் தமையனாரும் நேரே கேட்டறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். பெரியவர்களின் பெரு விருப்பத்திற்கு மாறு காணுதலாகாது எனக் கருதிய அடிகள் மணவினைக்கு ஒருப்பட்டார். அடிகளுக்கு உற்ற மனைவியார் தனக்கோட்டி அம்மையார் தாமடைந்த மணவாளர் பொறி வாயில் ஐந்தவித்தவர் என்பதை உணர்ந்து, இவர் கண்ட தூயநெறிக்குப் பழுதுநேராது நடந்துகொண்டார். அடிகளுக்கு இருந்த பல சீடர்களில் ஒருவர் தொழுவூர் வேலாயுத முதலியார். அடிகளார் சென்னை வாழ்க்கையை நீத்துச் சிதம்பரம் நண்ணினார். பின்னர் வடலூருக்கு அணித்தே மூன்றுமைல் தொலைவிலுள்ள மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத்தில் வடலூரிலே வாழ்ந்து வந்தார்.

திருமந்திரத்தில் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்னும் பொதுமையைக் காண்கிறோம். திருமூலருக்குப்பின் சமரசத்திற்குப் புத்துயிர் தந்தவர் தாயுமானார். அப்பெரியார்களின் வழிவந்த வடலூரர் விரிவான முறையில் சமரச சன்மார்க்கத்தை நிறுவினார்.

இறையின் பேரிரக்கமே நமக்கு மனித உடலைத் தந்துளது என்பதனை இவர் 'தீயகான் விலங்கை மானிடனாக ஆக்கியது கடவுளின் கழிபேரிரக்கம் ' என்கின்றார். இறைவனின் பெருங்கருணைத் திறம் ஊழை அகற்றுவதில் தானுளது. மதியால் இறையருளை நாடி, இறையின் துணைகொண்டு ஊழை வெல்லுதல்தான் பெரியோர் கண்ட நெறி.

'புண்ணியமென்பது சீவகாருணியமுடமை ஆகும். பாவம் என்பது சீவகாருணியமின்மை. சீவகாருணியத்தினாற்றான் இறையின் இயற்கையின் விரிவான அருளை அடைய முடியும். உயிர்தொறும் இறைவன் திருநடம் புரிகின்றான்' என்று பலவிடங்களில் இவர் குறிக்கின்றார். உயிர்கள் அனைத்தையும் பின்னிப் பிணைத்து நிற்பது ஆன்மநேய ஒருமை. இதனை அடிகளார் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை' என்று கருதுகின்றார். சீவகாருணிய ஒழுக்கத்தை நெடிது விளக்கி, உயிராக்கம் வளர்வதற்குரிய சாதனமாகிய பசி ஆற்றுவித்தலுக்குச் சத்திய தருமச்சாலை ஒன்றை வடலூரிலே நிறுவினார்.

மனிதனுக்குப் புறத்தும் அகத்தும் ஒளி வேண்டற்பாலது. மனிதன் எதைச் சார்ந்து வாழ்கின்றானோ அதன் வண்ணம் ஆகின்றான். ஒளியைக் கண்டு, ஒளியையே நினைத்து, ஒளியில் நின்று நிலவ, ஒளியாவான். அடிகளார் சித்திவிளாகத்தில் மறையும்பொருட்டு விடை பெற்றபொழுது மக்கள் பிரிவாற்றாமையால் வருந்தி, ஏதேனும் நினைவுக்குறியாகத் தரல் வேண்டும் என வேண்டத் தாம் நாளும் வழிபட்ட திருவிளக்கைத் தந்து சென்றனர். இத்திருவிளக்கை நினைவூட்ட இன்றும் மேட்டுக்குப்பத்தில் ஒரு விளக்கு எந்த நேரமும் எரிந்து வருகிறது. திருவிளக்கு முனையில் கடவுள் விளக்கமுளது. ஆதலால், அதனை வழிபடப் பணித்தார். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்பது அடிகளின் அருள் வாக்காகும்.

எம்மதத்தினரும் ஒருங்குசேர்ந்து வழிபடும்படிச் சத்தியஞான சபையைக் கட்டுவித்தார். அச்சபையின் அமைப்பு ஞாலத்தின்கண் காணாத ஒன்றாகும். அது தாமரை வடிவில் எண்கோணமாக அழகுறப் பொலிகின்றது. உளத்திலே பல மறைப்புக்களை விலக்கி விலக்கி, ஒளி உருவினனாகிய இறைவனைக் காணுமாறு அவர் அறிவிக்கின்றார். ஒளி வழிபாடுதான் அங்கு நடைபெறுகின்றது. ஏழு திரைகளும் நீங்கப் பெற்றபின் ஒளியைக் காணலாம். இதன் தத்துவத்தை அவர் இயற்றிய அருட்பாவில் பரக்கக் காணலாம்.

சாகாக்கலையை மரணமிலாப் பெருவாழ்வு என்று அடிகள் குறிக்கின்றார். சித்தர்கள் இறவாத கலையில் மிக்க நம்பிக்கை கொண்டவர்கள். சித்தர் கணம் என்ற ஒன்றும் இருந்து