பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 99

ஆய் முத்தப் பந்தரில் மெல்லணை

மீது உன் அருகிருந்து ‘நீமுத்தம் தா என்று அவர் கொஞ்சும்

வேளையில், நித்தநித்தம் வேய்முத்த ரோடுஎன் குறைகள்

எல்லாம், மெல்லமெல்லச் சொன்னால் வாய்முத்தம் சிந்தி விடுமோ?

நெல்வேலி வடிவு அன்னையே!

என்று அன்னையிடமே கேட்கிறான். இவ்வளவு ஆத்திரத்தோடு கவிஞன் கேட்டபின் அன்னை சும்மா இருப்பாளா? சிபாரிசு பலமாகத்தான் செய்திருப்பாள். நெல்லையப்பரும் மனைவி உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலா இருந்திருப்பார், கவிஞனுக்கு விடிவு காலமும் காலதாமதம் இல்லாமலே வந்திருக்கும். உண்மையிலேயே இப்படியே நடந்தது என்பது அல்ல பொருள். இறைவனையும் இறைவியையும் மனம் ஒத்த காதலர்களாகக் கற்பனை பண்ணி இப்படிக் கவிஞன் பாடுவதிலே ஒரு சுவை கண்டிருக்கிறான். இந்த இறைவனாம் நெல்லையப்பரும் இறைவியாம் காந்திமதி அம்மையும் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருநெல்வேலி. அத்தலத்துக்கே செல்கின்றோம் நாம் இன்று.

திருநெல்வேலி தென்பாண்டி நாட்டின் தென்பகுதியிலே உள்ள ஒரு பழம் பதி. பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை,’ நதிக்கரையிலே உள்ள ஒரு நகரம் திருநெல்வேலி. டவுன் ஸ்டேஷனில் இறங்கினால், வடக்கு நோக்கி நாலு பர்லாங்கு வரவேணும். அப்படி வந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம். இந்தக் கோயிலிலே ஒரு சம்பிரதாயம். கோயிலுக்கு வருபவர் எல்லாம் முதல் முதல் சென்று தரிசிப்பது காந்திமதி அம்மையையே. ஆம்! மதுரையில் மலயத்துவஜன் மகளான மீனாட்சிக்கு எத்தனை பிராதான்யம் அந்தக் கோயிலில் உண்டோ, அத்தனை இங்கு காந்திமதிக்கும் உண்டு. நெல்வேலி முழுதும் வீட்டுக்கு ஒரு காந்திமதி அல்லது காந்திமதி நாதன் இருப்பார்.

காந்திமதியம்மன் கோயில் வாயில் வழியாகவே நாமும் நுழையலாம். உள்ளே சென்றதும் சந்நிதிக்கு எதிரில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தைக் காணலாம். அதற்கு வடபுறமே பொற்றாமரைக் குளம். மதுரையைப் போல் பெரிதல்ல. ஆயினும் அழகாக இருக்கும். அங்கிருந்தே கோபுர தரிசனம் செய்யலாம். அதன்பின் மகாமண்டபம் எல்லாம் கடந்து அர்த்த மண்டபம் வந்து, அங்கிருந்து காந்திமதி