பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தொகுப்பினை அரண் செய்கின்றன. இதைவிட அருமையாக வேறு யார் சொல்லக் கூடும்? ஆகவே, இந்தப் புதிய பதிப்பிற்கும் அந்தப். பழைய முகவுரைகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நால்வரின் அன்புக்கும் தழைதாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொண்டைமானவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த சமயம், முதலில் நூற்றெட்டு கோயில்களைத்தான் தேர்ந்தெடுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் எழுதி முடித்தபோது 121 கோயில்கள் இடம்பெற்றன. தொகுப்பு வெளியிட்ட பின்னர் விடுபட்டுப்போன மற்ற கோயில்கள் பற்றிய கட்டுரைகளும் வெளியாயின. அவற்றை எல்லாம் தொகுத்து, இந்தத் தலைப்பின் கீழ் ஐந்தாம் பாகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை அண்மையில் கலைஞன் பதிப்பகம் நிறைவேற்றித் தந்திருக்கிறது. வேங்கடம் முதல் குமரி வரை தொகுப்புக்குக் கிடைத்த வரவேற்பு தான், தொண்டைமானவர்கள் வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று அங்குள்ள திருக்கோயில்களின் மூர்த்தங்களையும், கலைச் செல்வங்களையும் கண்டு சொல்லப் பெரிதும் துணைபுரிந்திருக்கிறது. அந்தக் கட்டுரைகளும் அபிராமி நிலையத்தின் வெளியீடாக வேங்கடத்துக்கு அப்பால் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. வேங்கடத்துக்கு அப்பால் என்ற நூலின் இரண்டாம் பதிப்பையும் கலைஞன் பதிப்பகமே வெளியிட ஆர்வம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமன்று, இந்தியத் திருநாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்களும், ஏன் கடல் கடந்த நாடுகளில் உள்ள தமிழன்பர்களும் இந்த நூல்கள் வெளிவர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள்.

தமிழ் இனத்தின் கலையுணர்வு, கலாச்சாரம், பண்பாடு இவற்றின் வளர்ப்புப் பண்ணையாகவே தமிழகத்துத் திருக்கோயில்கள் விளங்கி வந்திருக்கின்றன. என்றென்றும் அவை அங்கே பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையுடன் இந்த நான்காவது பதிப்பினையும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் வைக்கிறோம். இந்த நான்காம் பதிப்பினை நல்ல முறையில் கொணர்ந்திருக்கும் கலைஞன் பதிப்பகத்தாருக்கு நன்றி சொல்லப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். பாஸ்கர நிலையம் ராஜேஸ்வரி நடராஜன் சாஸ்திரி நகர், - சென்னை - 20.