காட்சி-3.
இடம்:-பாண்டியன் அந்தப்புரம். காலம்:-மாலை.
(பாண்டியன், குணவதி, குமுதம், உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.)
பாண்டியன்:- குணவதி! நீ நேற்றிரவு நிலாமுற்றத்தில் வீணையில் இசைத்துப் பாடிக் கொண்டிருந்தாயல்லவா! அது என்ன பாடல்?
குணவதி:- அதுவா அப்பா! அது நடனத்திற்காக இயற்றப்பட்டது.
பாண்டியன்:- அப்படியா! மிகவும் நன்றாய் அமைந்திருந்தது, அதன் பொருள்?
குணவதி:- சிவபெருமான் மீது காதல் கொண்ட ஒரு யுவதி தன் காதலனை ஒரு திரையில் சித்தரித்துக் கண்டுமகிழ்ச் சியடைகிறாள். இதைக் கண்ட யுவதியின் தாய் தன் மகளையும் சினந்து சிவனையும் இழித்துக் கூறுகிறாள்.
பாண்டியன்:- பேஷ். நல்ல கற்பனை. – ஆமாம். புலவர் உனக்கு நடனப் பாடல்கள் கூடவா பயிற்றுவிக்கிறார்?
குமுதம்:- பாடல் மட்டுமா? நடனம் கூடப் பயிற்றுவிக்கிறாரே?
பாண்டியன்:- அப்படியா!-அந்தப் பாடலும் அவர் இயற்றியது தானோ?
குணவதி:- இல்லை.
பாண்டியன்:- வேறு யார் இயற்றியது?
குமுதம்:- வேறு யார்? இளவரசியாரே இயற்றியது தான்.
குணவதி:- (நாணத்துடன் தலை குனிகிறாள்.)