பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

97


வாழ்கின்றவர்களே. பிறந்தவுடன் தாய் பாலூட்டி இன்பமாகப் பாராட்டியும், உறங்குதல், மலம், சிறுநீர் கழித்தல் போன்ற பழக்கவழக்கங்களை முறைப்படுத்தியும் உதவுகின்றாள். குளிப்பாட்டுதல், தாலாட்டுதல் போன்றவற்றால் பாராட்டிப் பேசி வளர்க்கின்றாள்; இன்னும் பல்வேறு முறைகளில் குழந்தைக்கு மனநிறைவு தருகின்றாள். குழந்தையும் தனக்கு மனநிறைவு தருபவர்களிடம் அன்பு கொள்கின்றது. இதுவே சமூகப்பண்பு வளர்ச்சிக்கு அடிப்படை. கைகால்களின் இயக்கங்களாலும், புன்முறுவலாலும் குழந்தை மனநிறைவை வெளிப்படுத்துகின்றது. முகமலர்ச்சி, குரல், ஊற்றுணர்ச்சி முதலிய பல வேறுபாடுகளை உணர்ந்து குழந்தை தாயின் பாராட்டைப் பெரிதும் விரும்புகின்றது.

இரண்டாம் திங்களில் குழவி தன்னைப் பார்ப்பவரைக் கண்டு புன்முறுவல் கொள்கிறது. பெரியோர்களை இவ்வாறு கண்டறிந்த பிறகே தன்னைப்போன்ற குழவிகளைக் கண்டு புன்னகை கொள்ளுகின்றது. சாதாரணமாக 7, 8 திங்கள் வரை பிற குழவிகளிடம் அக்கறை கொள்வதில்லை. முதல் வயதின் இறுதியில் பிற குழவிகளின் விளையாட்டுப்பொருள்களில் மட்டிலும் அக்கறை கொள்கின்றது; அது காரணமாகச் சண்டையும் இடுகின்றது; ஆனால் குழந்தைகளிடம் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை. ஏறக்குறைய 15 திங்களுக்குப் பிறகே பிற குழவிகளிடம் அன்பு காட்டுகின்றது. ஆனால், இரண்டாம் வயதில், உண்மையான கூட்டுறவு அரும்புவிட்டு மலர்கின்றது. இரண்டாம் யாண்டிலிருந்தே பிற குழந்தைகளின் தனி விளையாட்டைப் பார்க்கின்றது. அதைப்போலவே தானும் செய்கின்றதேயன்றி, அக்குழந்தையுடன் சேர்ந்து அதிக நேரம் ஒரே விளையாட்டை விளையாடுவதில்லை. இரண்டு குழவிகள் சேர்ந்து விளையாடும் நேரம் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றது. மூன்றாம் வயதில் குழவிகள் ஒரே பொருள்களைக் கொண்டு அருகிலிருந்து விளையாடுகின்றன; ஆனால் நான்காம் வயதில் வீடுகட்டி விளையாடுதல் போன்ற பெரிய விளையாட்டில் பல குழந்தைகள் சேர்ந்து விளையாடுகின்றன. யாண்டுதோறும் விளையாட்டுக் குழுக்களில் அதிகமாக ஒற்றுமைப் பாங்கையும் வேலையைப் பங்கிட்டுக் கொள்ளும் தன்மையையும் காண்கின்றோம். இவ்வாறு வளரும் சமூக வளர்ச்சி குழந்தைகளின் அறிதிறன்[1] வளர்ச்சியையும் அறிவு[2] வளர்ச்சியையும் பொறுத்துள்ளது.


  1. அறிதிறன்-Intelligence
  2. அறிவு-Knowledge