பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிவழியும் சூழ்நிலையும்

131


களிலும் ஒழுக்கத்திலும்கூட தந்தையை ஒத்துள்ளது என்பர். 'தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை,' 'மகனுரைக்கும் தந்தை நலத்தலை' 'தந்தையர் ஒப்பர் மக்கள்' என்ற கூற்றுகளையும் சான்றுகளாகக் காட்டுவர். பிறவிவழியாக வரும் இந்த இயல்பே குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கினைப் பெறுகிறதென்றும், அதுவே குழந்தைபெறும் கல்வியின் சாத்தியக் கூறுகளை அறுதியிடுகின்றது என்றும் கூறுவர். எனவே, குழந்தை தன் பெற்றோர்களிடமிருந்து பெறும் சில திறன்களும் கவர்ச்சிகளும் அதன் கல்வியை வரம்புகட்டிவிடுகின்றன என்றும், அவை மலரும் தன்மையும் நெறியும் அக்குழந்தை வாழும் சூழ்நிலையால் எஞ்ஞான்றும் செல்வாக்குப் பெறுவதில்லை என்றும் பகர்வர். இவ்வாறு குடிவழிக்குத் தரும் முக்கியத்துவத்தால் குழந்தைக் கல்வியில் சூழ்நிலையைப் பற்றிய எண்ணம், முயற்சி, வருந்தியுழைக்கும் கட்டுப்பாடு ஆகியவை யாவும் பயனற்றவை எனக் கருதுவதாக முடிகின்றது. அவர்கள் பாபர், சிவாஜி, இரஞ்சிட்சிங் போன்றவர்களை எடுத்துக்காட்டி அவர்கள் எவ்வளவு விடாமுயற்சியுடன் தமது வாழ்க்கையில் நேரிட்ட எதிரான சூழ்நிலையை எவ்வாறு சமாளித்தனர் என்றும், தம்முடைய சூழ்நிலையில் ஊக்கம் கொடுக்கும் சக்திகளை எவ்வாறு முறியடித்தனர் என்றும், தாம் செல்லும் வழியில் கடுமையான தடைகளும் தொல்லைகளும் இருந்தபோதிலும் எவ்வாறு ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிச் சிறப்புற்றனர் என்றும் சான்றுகளை ஒன்றுக்கு மேலொன்றாக அடுக்குவர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இம்மாதிரியான சூழ்நிலையில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் யாவரும் உற்சாகத்துடன் செயலாற்றுவதுமில்லை; அப்படி ஆற்றினாலும் தோல்வியையே அடைகின்றனர். ஒரு சிலர் மட்டிலும் இங்ஙனம் அருஞ்செயல்களின் கொடுமுடி காண்பதற்கும் பிற சிறப்புகளை எய்துவதற்கும் காரணம், அவர்கள் பிறவியுடன் பெற்ற இயல்பும் மேதைத் தன்மையுமே[1] ஆகும். எனவே, குடிவழியாகப் பெறும் பண்புக் கூறுகளும்[2] பிறவியிலேயமைந்த இயற்கைப் பேறுமே ஒரு குழந்தையின் ஒழுக்கம், நடத்தை, ஆளுமை ஆகியவற்றை இறுதியாக அறுதியிடுகின்றன என்று வற்புறுத்துவர். 'விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா' என்பது இவர்கள் விடுக்கும் வினா, இதைச் சரியென ஒப்புக்கொண்டால் பள்ளியும் ஆசிரியரும் வீண் என்று கொள்ள வேண்டியதாக முடியும்.


  1. 8. மேதைத் தன்மை-Genius.
  2. 9. பண்புக் கூறு-Trait.