பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கூறி, 'அவரை போட்டால் துவரை முளைக்காது' என்பது உறுதி என்ற சமாதானமும் கூறுகின்றனர். அவரை போட்டால் துவரை முளைக்காது என்பது உண்மைதான். ஆனால் தக்க முறையில் சூழ்நிலையைக் கவனித்தால் சிறந்த அவரையையே உண்டாக்குதல் முடியும்; தக்கவாறு கவனித்தால் துவரை விளைச்சலையும் அதிகரிக்கச்செய்தல் இயலும். மாணாக்கர்களின் இயல்புகள் வெவ்வேறாக உள்ளன என்பதும், அவற்றின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட திட்டமான போக்கிலேயே வளர்கின்றன என்பதும் உண்மையே; ஆனால், அப்போக்கில் வளர்ச்சி பெறுவதில் மேம்பாடு அடையச் செய்வதும் குடிவழி வந்த முதலைச் சிறந்த முறையில் கையாளுவதும் நம் கையில் தான் உள்ளது. கவனமாக எருவிடுதல், புலத்தைத் தக்க முறையில் பண்படுத்தல், நீர்ப்பாய்ச்சும் முறை போன்ற அறிவியல் முறைச் சாகுபடியால் விதைகள் செழித்து வளர்கின்றன; உயர்ந்த பலனையும் தருகின்றன. குடிவழி அறுதியிட்டிருக்கும் எல்லைக்கு மீறிய செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது வீனே; ஆனால், குழந்தைகள் குடிவழிப் பெற்ற திறன்களையும் ஆற்றல்களையும் அவ்வவற்றின் எல்லைக்குள் சிறந்த முறையில் வளர்வதற்குச் சாதகமான வாய்ப்புகள் உள்ள சூழ்நிலையை உண்டாக்குவதில் ஆசிரியர் எப்பொழுதும் துணை செய்யலாம் என்பதை உணரவேண்டும். தக்க சூழ்நிலையை அமைத்துக் கொண்டதால் அண்மைக்காலத்தில் ஜப்பான் வியத்தகு முறையில் புத்துயிர் பெற்றுப் பொலிவதை உலக வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது.

வேறுசிலர் குடிவழியை அறவே புறக்கணித்து, கல்வி, பயிற்சி, சூழ்நிலை முதலிய சாதகமான வாய்ப்புகளால் மனிதத் திறமைக்குள்ளடங்கிய அனைத்தையுமே எய்துவிக்கலாம் என்று வரம்பிகந்து கருதுகின்றனர். அவர்கள் இன்பத்தையே எதிர் நோக்கும் இறுமாந்த மனப்பான்மையால் தவறிழைத்து பெற முடியாததைப் பெறமுயல்வதில் ஏராளமான முயற்சி, காலம், பணம் ஆகியவற்றைப் பாழ்படுத்துகின்றனர். தம்முடைய ஆற்றலுக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட பொறியியற் கல்வியையும் மருத்துவக் கல்வியையும் மேற்கொண்டு-பல்வேறு செல்வாக்குகளினால் அக்கல்லூரிகளில் நுழையவும் இடம் பெற்று-திண்டாடுவதை நாம் காணாமல் இல்லை. எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைப் புகட்டினாலும், பயிற்சியளித்தாலும், தக்க சூழ்நிலையை உண்டாக்கினாலும், குடிவழியால் கை வரப்பெறாத கவர்ச்சிகளையும் திறன்களையும் உண்டாக்க முடியாது. ஒவியம் தீட்டும் திறனோ இசையில் ஈடுபடும் திறனோ வாய்க்கப் பெறாத தனியாளை என்னதான்