பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றல்

219


மாணாக்கர்கள் செயலற்று வாளா இருக்க வேண்டிய நிலைதான் நிலவிற்று. ஆகவே, மாணாக்கர்களிடம் ஈர்ப்புகள்[1] உண்டாகின்றன. இந்த ஈர்ப்புகளுக்கும் போக்கிடம் இல்லாததால் அவை பகற்கனா, குறிப்பேட்டிலோ நூலிலோ ஓவியம் தீட்டல் குறிப்புகள் எழுதிப் பரப்புதல் போன்ற செயல்களாகப் பரிணமிக்கின்றன. வகுப்பு முடிந்ததும் மாணாக்கர் வெளி வருங்கால் ஓட்டத்துடனும் உரத்த குரலுடனும் இவ் வீர்ப்புகள் வெளிப்படுவதைக் காணலாம். ஒரு குறுகிய காலத்திற்குள் வெளிப்படும் ஆற்றல் மிகப் பெரிய அளவினது! ஆனால், கற்றல் செயல்கள் தேவைகளுக்கேற்றவாறு தொடர்பு கொண்டிருப்பின் இந்த ஆற்றலின் பெரும்பகுதியை வகுப்பறைகளில் ஆக்க முறைகளில் திருப்பி விடலாம்.

புதிய முறைக் கல்வியில் குழந்தைக்கும் வாழ்க்கை நிகழ்ச்சி கட்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. செய்கைத் திட்டமும் செயல் முறையும் வற்புறுத்தப் பெறுகின்றன. இஃது உளவியலை அடிப்படையாகக் கொண்டது. கவர்ச்சி, நோக்கமுடைமை, வாழ்க்கைத் தொடர்பு போன்றவற்றைப் புதியமுறைக் கல்வி வற்புறுத்துகின்றது.

செயல் முறைப் பள்ளியில் மாணாக்கர்கள் பொருள்களை ஏட்டுப் பாடமாகப் பயில்வதில்லை; இங்குப் பொருள்களைக் கையாளுவதாலும், இயற்றுதலாலும் நேரான அநுபவத்தைப் பெறுகின்றனர். பள்ளி, குழவிகள் கூடித் தங்கள் செயல்களைத் திட்டமிட்டு அவற்றை இயற்றும் இடமாகத் திகழ்கின்றது. இங்கு அவர்கள் இயற்கையாகச் செயலாற்றுவதற்கும், அச் செயல்களின் பலனைக் காண்பதற்கும் அதிக வாய்ப்புகள் அளிக்கப் பெறுகின்றன. சுருங்கக்கூறின், பள்ளி ஓர் ஆய்வுக்கூட மாகின்றது. குழந்தைகள் அங்குப் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்; ஒவ்வொருவரும் தத்தம் திறனுக்கேற்றவாறு தத்தம் பங்குக்குரிய செயல்களைப் புரிகின்றனர். இங்கு ஆசிரியர் ஒரு சர்வாதிகாரி அல்லர்; குழவிகளுடன் ஒத்துழைத்து, தேவைப் படுங்கால் அவர்கட்கு வழிகாட்டி, அவர்கள் முயற்சியைத் தக்க முறையில் பயன்படுத்துமாறு தூண்டுவிக்கும் ஒரு முதியோராவர். இம்முறையில் கற்கும் குழவிகளிடம் 'ஏட்டுச்சுரைக் காய் கறிக்குதவாது', 'பள்ளிக்கணக்குப் புள்ளிக்குதவாது' என்ற பழமொழிகளைப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.


  1. ஈர்ப்புகள்-Tension.