இயல்பு பிறழ்ந்த நடத்தை
363
பெறும் செயல் [1] என வழங்கப்பெறும். அது நடைபெறுவது நமக்குத் தெரியாது. நனவிலி நிலையில் அது நடைபெறுகின்றது.
குழந்தைகளிடம் காணப்பெறும் பெரும்பாலான இயல்பு பிறழ்ந்த நடத்தைகட்கும் நெறி பிறழ்வான நடத்தைகட்கும் அவர்கள் மனத்தில் நடைபெறும் போராட்டங்களும் நசுக்கப் பெற்று அடைபட்டிருக்கும் இச்சைகளுமே காரணமாகும். நனவிலி மனத்தைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் இவற்றிற்கு நல்ல விளக்கம் தரலாம். எனவே, குழந்தைகளின் கல்வியில் பொறுப்பு கொண்டுள்ள ஆசிரியருக்கும் நனவிலி மனத்தை பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாதது. இனி, குழவிகளின் நடத்தையிலும் மாணாக்கர்களின் நடத்தையிலும் காணப் பெறும் இயல்பானவையும் இயல்பு பிறழ்ந்தவையுமான சில செயல்களை ஆராய்வோம். நெறி பிறழ்வினை மேலே கண்டோம். ஏனையவற்றை ஈண்டுக் காண்போம்.
குழவிகளின் முதலாண்டில் இச்செயலை நாம் எதிர்பார்க்கலாம். சில குழவிகளிடம் பிறந்த சில நாட்களிலேயே இப்பழக்கம் ஏற்படுகின்றது; சிலரிடம் சற்று தாமதத்துடன் தொடங்குகின்றது; பிறரிடம் இப்பழக்கம் தோன்றுவதே இல்லை. தாயின் மார்பிற்குப் பதிலாகக் குழந்தை தன்விரலைச் சப்பி மகிழ்கின்றது; வாயசைவுகளில் குழந்தை அளவற்ற மகிழ்ச்சி கொள்ளுகின்றது. முதல் இரண்டாண்டுகளில் சில தடவைகளில் பெருவிரல் சப்புவதைப்பற்றி நாம் அதிகமாக கவலை கொள்ள வேண்டியதில்லை. இதில் அதிகப் பரபரப்பு காட்டாதிருந்தால் இப்பழக்கம் நாளடைவில் தானாகவே மறைந்து போகும். குழவிகள் இதை விடுவதற்குமுன் நாம் இதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், பல சிக்கல்கள் ஏற்படுகின்றன; சில குழவிகளிடம் அதை நீக்கவே முடியாது போகின்றது.
பெருவிரல் சுவைத்தலை [2]ப்பற்றிப் பல கருத்து மாறுபாடுகள் உள்ளன. இஃது உடல் அல்லது உள்ளம்பற்றிய கோளாறினால் ஏற்படலாம். குழவிகளுக்குப் போதுமான தாய்ப்பால், புட்டிப் பால் கிடைக்காததால்தான் இப்பழக்கம் சில குழவிகளிடம்