பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/401

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்-11

ஒழுக்க வளர்ச்சி


'ஒ'ழுக்கம் என்பதைப்பற்றி நாம் பலபடியாகப் பேசுகின்றோம். நல்லொழுக்கம் என்றும் தீயொழுக்கம் என்றும், உயர் ஒழுக்கம் என்றும் தாழ்வொழுக்கம் என்றும் ஒழுக்கம் பலவிதமாகப் பாகுபடுத்தி உரைக்கப்பெறுகின்றது. ஒழுக்கம் என்பதற்குப் பலவிதமாக இலக்கணம் கூறலாம். கூறுவோர் நோக்கத்திற் கேற்ப அவரால் கூறப்பெறும் இலக்கணமும் அமையும். உயிர் நூலார் ஒருவிதமாக உரைப்பர்; அற நூலார் பிறிதொருவிதமாகப் பகர்வர். கல்வி உளவியல் நெறிப் படி இன்னொரு விதமாக இவ் விலக்கணம் அமையும்; இங்குச் சமூக இயல் பற்றிய கூறுகளை இஃது அடக்கிக்கொண்டு இலங்கும். திருவள்ளுவர் 'ஒழுக்கமுடைமை' என்ற அதிகாரத்தில் தரும் சில குறள்கள் ஈண்டு ஒர்ந்து உணர்தற்பாலன.

கல்வி உளவியல் கூறும் 'ஒழுக்கம் யாது?' தனியாள் கொண்டிருக்கும் எல்லா மனப் போக்குகளின் ஒட்டுமொத்தமே ஒழுக்கம் என்பது. முதலாவதாக, அது குடிவழியை, அஃதாவது பிறவியிலேயே இயல்பாக அமைந்த போக்குகளை-இயல் பூக்கங்களை-அடிப்படையாகக் கொண்டது. நாளடைவில் இப்போக்கு தனியாள் சமூகச் சூழ்நிலையில் பெறும் பட்டறிவின் மூலம் திருத்தியமைக்கப்பெற்றுப் பழக்கங்கள் அவற்றின் இடத் தைப் பெறுகின்றன. ஒழுக்கம் பழக்கங்களின் திரட்சியே என்று நாம் அடிக்கடிக் கூறுகின்றோமன்றோ? ஆனால், ஒழுக்கம் பழக்கங்களுக்கும் மேற்பட்டது. காரணம் பழக்கங்கள் பொறியியல் தன்மையுடையவை; ஒரு குறிப்பிட்ட நிலைமைகளுக் கேற்றவாறு தாமாக இயங்குபவை; ஆனால் வாழ்க்கை இங்ங்ணம் தானாக இயங்குவதன்று; பொறியியல் தன்மை யுடையதுமன்று. பழக்கங்களுக்குப் பின்னினியாக நின்று இயங்கக் கூடிய செயலாண்மை1 ஒன்றிருக்க வேண்டும்:


1. செயலாண்மை-Agency.