பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/417

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

கல்வி உளவியல் கோட்பாடுகள்



வகுப்பறைகளிலும், விளையாடுகளங்களிலும், பிற இடங்களிலும் மாணாக்கர்களிடம் தன்னம்பிக்கையும் தன்-மதிப்பும் வளர வாய்ப்புகள் நல்குதல் வேண்டும். மன உறுதி வளரவும், சிறந்த பழக்கங்களை வளர்க்கவும் இடம் தர வேண்டும். எச். செயல்கள் செய்தாலும் அவற்றின் நோக்கங்களை மாணாக்கர் அறியச் செய்தல் வேண்டும். நோக்கங்கள் அடையவேண்டும் என்று மாணாக்கர்கள் தாமாக முயன்றால்தான் மனத் திண்மை வளரும். சொந்தக் கவர்ச்சிகளின்றேல் சுறுசுறுப்பும் விடாமுயற்சியும் தோன்றா. மாணாக்கர்கள்முன் வைக்கப் பெறும் நோக்கங்கள் விரைவில் அடையக்கூடியனவாக இருத்தல் வேண்டும். எந்த வேலையிலும் நிர்ப்பந்தமும் பலவந்தமும் கூடா: எதையும் விடுதலையுணர்ச்சியுடன் செய்தால்தான் மனத்திண்மை வளரும். தேர்வுக்குமுன் மாணாக்கர்களால் செய்யப்பெறும் வேலை ஆண்டின் தொடக்கத்தில் செய்யப் பெறுவதில்லை என்பது நாம் அறிந்ததே. இதிலிருந்து ஆசிரியர்கள் கற்பிக்கும் முறைகளிலும் பிறவற்றிலும் பல படிப் பினைகளை அறிந்து கொள்ளலாம். பாடங்கள் சம்பந்தமாகப் பல திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நிறைவேற்ற வாய்ப்புகள் தரலாம். இன்றைய குடிமைப் பயிற்சியிலுள்ள பல நற்கூறுகளைக் கொண்டு இவற்றை எளிதில் அமைக்கலாம். சிறிய செயல்களிலும் பெரிய செயல்களிலும் பொறுப்பு மாணாக்கர்களுடையதாக அமைந்தால் அனைத்தும் சீர்படும்.

வரலாற்றுப் பாடங்கள், இலக்கியப் பாடங்கள், அறிவியலறிஞர்களின் வரலாறுகள் போன்றவற்றிலிருந்து பல அறிஞர்கள், ஒழுக்க சீலர்கள், தொண்டர்கள் போன்றவர்களின் குறிக்கோள்களைக் கொண்டு மாணாக்கர்கள் தமக்கு வேண்டிய குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர். எனவே, அதற்கேற்ற பகுதிகள் பாடங்களில் அமையுமாறு செய்தல் வேண்டும். பள்ளி நூலகங்களிலும் மாணாக்கர்களின் பல நிலைகளுக்கேற்ப அவர்களே படித்தறிந்து கொள்ளக்கூடிய இத்தகைய வரலாறுகள் அடங்கிய பல நூல்களை வாங்கி வைத்து அவற்றை அவர்களே விரும்பிப் படிக்கும் வாய்ப்பு களையும் நல்குதல் வேண்டும்.

ஒழுக்கக் கல்வி தரும் நேரங்களில் உண்மையின் இன்றியமை யாமையை உணர்த்தவும், பொய்யின் விரும்பத்தகாமையை வற்புறுத்தவும் சிறு சொற்பொழிவுகள் நடத்துவதால் பயனில்லை. இவை நன்கு அமைவதற்குப் பள்ளி வாழ்க்கையிலேயே பல வாய்ப்புகளை நல்கி அவற்றின் மூலம் பயிற்சி யளித்தல் வேண்டும். துணிவு உண்டாக வேண்டுமாயின்,