பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 120

மீண்டும் ஓர் ஐயம்

தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்குப் பொருள் கூறவல்லார் கிடைக்காமற்போனார்கள் என்று உரைப்பாயிரம் கூறுவது வியப்பாக இருக்கிறது. இருக்கட்டும். பொருளதிகாரத்துக்கு உரை காணவல்லார் கிடைக்காமற்போனபோது ஆலவாயிற்கடவுள், பொருள்கூற வல்லவரை அளித்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்கு உரை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் அறுபது சூத்திரங்களைக் கொண்ட ஒரு புதிய நூலைக் களவியல் என்றும் பெயர் கொடுத்து ஆக்கித் தந்தார். இப்படிச் செய்ததேன்? தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் இருக்கும்போது, புதிய அகப்பொருள் சூத்திரங்களை எழுதித் தந்ததேன்?

இந்தப் புதிய அகப்பொருள் நூலுக்குச் சங்கப்புலவர் பொருள் கண்டார்களா என்றால் காணவில்லை. தங்களுக்கோர் காரணிகளைத் தரவேண்டும் என்று தவங்கிடந்து சிவபெருமானை வேண்டினார்கள். அவரும் ஒரு காரணிகளைக் காட்டினார். அந்தக் காரணிகளும் ஊமைப்பிள்ளை! இந்தக் காரணிகள், இந்தப் புதிய அகப்பொருளுக்கு நக்கீரர் உரைத்த உரைதான் உண்மையான உரை என்று மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்ததன் மூலம் மெய்யுரைக்குச் சான்று தந்தார்.

களவியல் சூத்திரங்களும் அகப்பொருள் சூத்திரங்களும்

மேற்கொண்டு ஆராய்ச்சியைச் செலுத்துவதற்கு முன்பு இறையனார் அகப்பொருள் (களவியல்) சூத்திரங்களைப் பற்றிக் காண்போம். இறையனார் புதிதாகச் செய்து கொடுத்த களவியல்ல அறுபது சூத்திரங்கள் முழுவதும் புதியவை அல்ல. அவர் தொல்காப்பியத்திலிருந்தும் சில சூத்திரங்களை எடுத்துத் தம்முடைய புதிய களவியலில் சேர்த்துக் கொண்டார். அவை: (1) தொல், வேற்றுமை 114. இறையனார் அகம் 59 (3)தொல், வேற்றுமை 174-இறையனார் அகம் 54 (3) தொல்கற்பியல் 187-இறையனார் அகம்43 (4) தொல். களவியல் 139- இறைனார் அகம் 18 (5) தொல். களவியல் 133 - இறையனார் அகம் 17 (6) தொல். களவியல் 27இறையனார் அகம்.7

தொல்காப்பிய அகப்பொருள் இருக்கும்போதே இறையனார் அகப்பொருளைப் புதிதாகச் செய்தார். ஏன்? தொல்காப்பிய அகப் பொருளுக்கும் இறையனார் அகப்பொருளுக்கும் வேறு பொருள்கள் உண்டா ? பழைய கருத்துகளுக்குப் பதிலாகப் புதிய கருத்துகள் கூறப்பட்டுள்ளனவா? ஒன்றும் இல்லை.

இறையனார் அகப்பொருளின் காலம்

இறையனார் அகப்பொருளின் உரையாசிரியர் அதனுடைய உரைப்பாயிரத்தில் இந்நூல் இயற்றப்பட்ட காலம் கடைச்சங்கக் காலம்