16
மயிலை சீனி வேங்கடசாமி
களப்பிரர் எப்போது வந்தனர்?
வடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், ஏழத்தாழ கி.பி.250-ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள் என்று கூறினோம். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது கி.பி.275-ல் என்று கூறுகிறார்.[1] கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று திரு சதாசிவபண்டாரத்தார் கூறுகிறார்.[2] திரு.எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார், கி.பி.6-ஆம் நூற்றாண்டில் களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று கூறுகிறார். "சங்கம் (வச்சிரநந்தி கி.பி.470-ல் நிறுவன திராவிட சங்கம்) கி.பி.5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமைக்கப்பட்டது. கி.பி.6-ஆம் நூற்றாண்டு தொடங்கின போது தமிழ் நாட்டின் அரசியல் விரைவாக மாறுதல் அடைந்தது. இந்தக் காலத்தில்தான் களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதும் நிகழ்த்தன" என்று அவர் எழுதுகிறார்.[3] இவர் கூறுவது ஏற்கத்தக்கது அன்று. களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகுதான் வச்சிர நந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்டதே தவிர வச்சிர நந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்ட பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்படவில்லை . ஆகவே, கி.பி.6-ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்று இவர் கூறுவது தவறு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்பதில் ஐயம் இல்லை . மேலும், இராமசாமி அய்யங்கார் இன்னொரு செய்தியையும் கூறுகிறார். "தமிழ் நாட்டில் ஜைனமதத்தை மேலும் உறுதியாக நிலைநாட்டுவதன் பொருட்டு ஜைனர் களப்பிரரைப் படையெடுத்து வருமாறு அழைத்தார்கள் என்று தோன்றுகிறது" என்று இவர் எழுதுகிறார்.[4] இவ்வாறு இவர் கூறுவதற்குச் சான்று இல்லை. கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும் தமிழகத்தில் இருந்த அரசியல் சூழ்நிலை கன்னட நாட்டுக் களப்பிரர் தமிழகத்தின்மேல் படையெடுத்து வருவதற்கு ஏற்றதாக இருந்தது. கடைச் சங்ககாலத்தில் இருந்த தமிழரசர்களும் குறுநில மன்னர்களும் ஒருவர் மேல் ஒருவர் அடிக்கடி போர் செய்து கொண்டிருந்ததைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். காரணம் இல்லாமலே தங்களுடைய போர் வல்லமையைக் காட்டுவதற்காகவே அரசர்கள் அக்காலத்தில் அடிக்கடி ஒருவர் மேல் ஒருவர் போர் செய்தனர். போர் செய்வது அவர்களின் வழக்கமாகவும் குறிக்கோளாகவும் இருந்தது. தமிழ் நாட்டு வேந்தர்களுக்குள்ளாகவே போர் செய்வதைப் பெருமையாகக்கருதினார்கள். போர் செய்வதை ஒரு கலையாகலே அமைத்துக் கொண்டனர், அரசர்களின் போர்ச் செயல்களைப்