பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

21

இவர்கள் சேர, சோழ, பாண்டியரின் கொடிகளைத்தங்களுடைய கொடிகளாகக் கொண்டிருந்தனர் என்பதைக் 'கெடலருமா முனிவர்' என்று தொடங்கும் செய்யுளினால் அறிகிறோம். (இணைப்பு காண்க) அந்தச் செய்யுளின் இறுதிப் பகுதி இவ்வாறு கூறுகிறது:

அடுதிறல் ஒருவ! நிற் பரவுதும், எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்
கயவொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
ஒன்றுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபு திகிரி யுருட்டுவோன் எனவே

இதனால், கயல் (மீன்), சிலை (வில்), கொடுவரி (புலி) ஆகிய அடையாளங்களைக் களப்பிரர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. அதாவது பாண்டியனுடைய மீன் கொடியையும் சேரனுடைய வில் கொடியையும் சோழனுடைய புலிக்கொடியையும் களப்பிரர் தங்களுடைய கொடியாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. சேர, சோழ, பாண்டியரின் அடையாளங்களைக் கொண்டிருந்தபடியால் இம்மூன்று நாடுகளையும் அவர்கள் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று ஐயமறத் தெரிகின்றது.

களப்பிரர் எத்தனை பேர் அரசாண்டார்கள் அவர்கள் நாட்டுக்கு என்னென்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை பாண்டி நாட்டில் மதுரையைத் தலைநகரமாக்கிக் கொண்டு களப்பிரர் அரசாண்டதை அறிகிறோம். உறையூர், காவிரிப் பூம்பட்டினங்களிலும் இருந்து சோழ நாட்டைக் களப்பிரர் அரசாண்டனர் என்பதும் தெரிகின்றது. தில்லையில் (சிதம்பரம்) இருந்தும் அரசாண்டதையறிகிறோம். சோழ நாட்டிலே களப்பாள் என்னும் ஊரில் ஒரு களப்பாளன் இருந்ததையறிகிறோம். சேர நாட்டில் எந்த ஊரில் இருந்து களப்பிரர் ஆட்சி செய்தனர் என்பது தெரியவில்லை. களப்பிரர் ஆட்சி, தொண்டை மண்டலத்தைத் தவிர ஏனைய தமிழ்நாடெங்கும் இருந்தது என்பது தெரிகிறது. களப்பிரர் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோதே பல்லவ அரசர் தமிழகத்தின் வடபகுதியாகிய தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆகவே களப்பிரர் ஆட்சி தொண்டை நாட்டில் ஏற்படவில்லை. அவர்களுடைய ஆட்சி தென் பெண்ணையாற்றுக்குத் தெற்கே சேர சோழ பாண்டிய நாடுகளில் இருந்தது.

களப்பிர அரசனுக்குக் கீழ் அவனுக்கு அடங்கிக் களப்பி குலத்து அரசர் சேர சோழ பாண்டிய நாடுகனை யரசாண்டனர் என்பது தெரிகிறது.

மூர்த்தியார்

பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சிலகாலம் மூத்திநாயனார் என்னும் ஒரு வணிகர் அரசாண்டதைப் பெரிய புராணம் கூறுகிறது. மதுரையை ஆண்ட களப்பிர அரசன் பிள்ளைப்பேறு இல்லாமல் இறந்துபோனாள். அவன் சைவ சமயத்துக்கு இடையூறுகளைச் செய்தவன்.