பக்கம்:கழுமலப்போர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

“இருநிலம் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை, ஒளிறுவாள்
 ஓடாமறவர் துணிப்பத், துணிந்தவை
கோடுகொள் ஒண்மதியை நக்கும் பாம்பு ஒக்குமே,
பாடார் இடிமுரசின் பாய்புனல் நீர்நாடன்

கூடாரை அட்ட களத்து.”
—களவழி: 22

யானைத் தலையில் தேர் உருளை :

சேரர் யானைப்படையால் சிறந்து விளங்கினர் என்றால், சோழர் தேர்ப்படையால் சிறந்தவர். அவர் தேர்ப்படை பகைவரும் பாராட்டும் பெருமை வாய்ந்தது. அத்தேர்ப் படைப் பெருமையால் ஒரு சோழ மன்னன், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி எனப் பெயர் சூட்டிப் பாராட்டப் பெற்றுளான். சேர நாட்டு யானைப் படையின் பெருமை கண்ட சோழன் செங்கணான், அதைப் பாழாக்கத் தன் தேர்ப்படையின் துணை வேண்டினான். பகைவர் பார்த்த அளவிலேயே பயந்து பின்னிடச் செய்யவல்ல பேருருவம் காண்பவர் கருத்தைக் குலைக்கும் காட்சி, காற்றெனக் கடுகி ஓடும் விரைவு ஆகிய இவை யத்தனையும் ஒருங்கே வாய்ந்த தேர்ப் படை கொண்டுவந்து சேரரைத் தாக்கினான். ஆனால், தான் அழிவுறாது, பகைவர் படையைப் பாழாக்கவல்ல அத்தேர்ப் படையும், சேரர்களின் களிற்றுப் படையால் நிலை குலைந்தது. முடிவில், சேரர் படை பாழாக, சோழர் படையே வெற்றி கண்டது என்றாலும், சேரரை அவ்வளவு எளிதில் வெற்றி கொள்ள முடியவில்லை சோழரால், சேரரை வெல்ல, சோழர் தம் தேர்ப் படையின் பெரும்பகுதியை இழக்க வேண்டியதாயிற்று. சேரர் களிற்றுப் படைமுன், சோழர் தேர்ப்படை ஆற்றல் இழந்து அழிந்தது. சோழர்க்குத் தோற்ற சேரர்களின் யானைப்படை, தன் ஆற்றலைத் தொடக்கத்திலேயே இழந்துவிடவில்லை. பகைவர் தேர்ப்படையைப் பாழாக்கிய பின்னரே அது அழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/53&oldid=1359925" இலிருந்து மீள்விக்கப்பட்டது