பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

கவிக்குயில் சரோஜினியின்

"தாய்மார்களே, நீங்கள் அடுப்பூதிக் கொண்டிருப்பது மட்டும் உங்கள் கடமையல்ல; நாட்டு விடுதலைக்காக உழைக்க வாருங்கள் என்று தாய்மார்களை நோக்கி அறை கூவலிட்டார்.

எழுச்சி பெற்றனர் இளைஞர்கள்; உணர்ச்சியுற்றனர் முதியவர்கள்; புரட்சி எண்ணங்களைப் பெற்றனர் பெண்கள்; நடுத்தர வயதுடைய வாலிபர்கள்; எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்ற நிலையிலே உருவானார்கள்!

சரோஜினியால் புதியதோர் விடுதலைப் படை தயாராகி வருவதைக் கண்ட வெள்ளையர் அரசு வெலவெலத்து சிந்தித்தது. என்ன செய்வது? எப்படி அடக்குவது? இதற்கு வழிகள் என்ன? என்று திட்டமிட்டபடியே இருந்தது பிரிட்டிஷ் ஆட்சி!

கவிதை பாடிக் கொண்டிருந்த சரோஜினி தேவி கனல் தெறிக்கப் பேசுகிறாளே; இதற்கா அவளைப் பாராட்டினோம்; பட்டம் வழங்கினோம்; உலகப் புகழை உருவாக்கிக் கொடுத்தோம் என்று உள்ளம் தடுமாறி அவளை அடக்கும் அடக்குமுறைகளைப் பற்றி விவாதித்தனர் வெள்ளையர்கள்!

போர்க்கள ஆடு ஒன்று பின்னுக்குப் போய் முன்னுக்கு வந்து கரடுமுரடாக பகையாட்டை மோதி மோதித் தாக்குவதைப் போன்ற ஆத்திர வெறியோடு அலைமோதிக் கிடந்தார்கள் ஆங்கிலேய அதிகாரிகள்!

கவிக்குயில் மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பாகப் பலரை தூண்டி விட்டு எதிர்வாத முழக்கமிட்டது ஆங்கில அரசு! எதுவும் எடுபடாததால் அடக்குமுறை ஆயுதங்கனை சரோஜினி தேவி மீது ஏவிட முயன்றது.