பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கவிக்குயில் சரோஜினியின்

அப்படிப்பட்ட ஒரு தலைவரை, ஆற்றல் மிக்க வீராங்கனையை, பெண் சிங்கச் சேவையைப் பாராட்டிப் பெருமைப் படுத்திட இந்தியாவும், அகில இந்திய காங்கிரசு மகாசபையும் விரும்பியது.

தொடக்கக்காலம் முதல் சரோஜினிநாயுடு தாய்க்குல முன்னேற்றத்துக்காகக் கடுமையாக உழைத்தவர். அப்படிபட்டவரை மக்களும், மகாசபையும் 1925-ம் ஆண்டு கான்பூரில் நடந்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைவராக்கிப் பெருமை பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பல சாதனைகளைச் செய்து, அங்குள்ள இந்தியர்களுக்கு பெருமையை, உரிமையை, தனி மனித சுதந்திரத்தைப் புதையலாக்கிக் கொடுத்து விட்டு, 1913-ம் ஆண்டு இந்தியா வந்த காந்தியடிகள், இங்கும் உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம், கிளர்ச்சி, போராட்டம் போன்ற ஆக்கப்பணிகளிலே அயராது, ஓய்வு ஒழிச்சலின்றி ஈடுபட்டு, உருவாக்கி மக்களை வேலை வாங்கிக்கொண்டே இருந்தார்.

அத்தகைய மகாத்மாவை வெள்ளை அரசு புறக்கணித்தாலும், அந்த மகானை மாபெரும் அரசியல் ஞானியாவே இந்தியத் தலைவர்கள் ஏற்று இவருடைய தலைமையின் கீழ் பணியாற்றிப் பெருமை பெற்று வந்தார்கள்.

எப்போது சுதந்திரம் பெறுவோம், எப்படிப்பட்ட அறப்போர்களைச் செய்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணங்களே மக்களிடையே ஓங்கி வளர்ந்து வந்திருந்தன. இதற்கான திட்டங்கள் என்ன என்பதை வரையறுக்கவே கவிக்குயில் சரோஜினிதேவி தலைமையில் காங்கிரஸ் மகாசபை கான்பூர் நகரில் கூடியது.