பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கவிக்குயில் சரோஜினியின்

பிரிட்டிஷ் அரசாங்கமும் இதுவரை நடந்த அந்த இந்திய அரசியல் ரணக்களங்களைக் கண்டு, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விடலாம் என்று கூறியது; ஆனால் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டால்தான் நல்லது என்பதைத் திட்டவட்டமாக அது முடிவு செய்தது!

முஸ்லிம் லீக்கின் தலைவரான முகமது அலி ஜின்னா காங்கிரஸ் மகாசபையில் இருந்தபோது தனிப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். பிறகு, முஸ்லிம் லீக் என்ற ஒரு கட்சியைத் துவக்கினார்; முஸ்லிம் மக்களுக்குத் தனி நாடு தேவை என்ற கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருந்தார்.

காந்தியடிகள் கூறிய எந்த யோசனைகளையும் ஜின்னர் கேட்கவில்லை; தனிநாடு என்ற மோகத்திலேயே மூழ்கிக் கிடந்தார்! அதனால்தான் பிரிட்டிஷாரும் இந்து-முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும்; அப்படி ஒரு ஒற்றுமை உருவானால்தான் சுதந்திரம் வழங்க முடியும் என்ற நிபந்தனையை விதித்தார்கள்.

கவியரசி சரோஜினி தேவி ஜின்னாவுடன் பல ஆண்டுகள் பழகியவர்; காந்தியார் பேச்சு சுமூகமாக முடியவேண்டும் என்பதற்காக கவிக்குயிலும் அவரிடம் பல தடவைகள் பேசிப் பார்த்தார். ஆனால், ஜின்னாவும்-லீக்கும் பிடிவாதமாகவே இறுதிவரை இருந்தன.

சரோஜினி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைப் பற்றித் தெளிவான கருத்துடையவர். முகமதுஅலி சகோதரர்களுடனும் காந்தியடிகளுடனும், கிலாபாத் இயக்கத்தில் சேர்ந்து போராடியவர். கவிக்குயில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இங்கே பார்ப்பது நல்லதல்லவா? இதோ ஒரு கூட்டத்தில் அவர் ஆற்றிய பேச்சின் ஒருபகுதி: