பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

97

இந்தச் சுயநலத்தை, தன்னை மட்டுக் காத்துக் கொண்டு மற்றவரைப் பாராமல் ஒதுங்கும் தன்மையை நீங்கள் கைவிடவேண்டும். நாடு பூராவையும், மக்கள் அனைவரையும், எல்லாப் பகுதியினரையும், எல்லா மதத்தினரையும், எல்லோரையும் சகோதரர்களாய் கருதி, சர்வஜன சகோதரத்துவத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

ஆங்கிலக் கவிகளான ஷெல்லியையும், கீட்சையும் படிக்கிறீர்கள்; அவர்கள் அறிவுறுத்தும் உலக சகோதரதுதுவத்தைப் போற்றுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஒழுகுவது எவ்வாறோ?

இந்து என்றும், முஸ்லிம் என்றும், பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்றும், சென்னைவாசி, வெளி மாகாணவாசி என்றும், வேற்றுமைகளைப் பாராட்டுவது ஏன்?

ஏட்டுக் கல்வி நாட்டுக்குப் பயன்படுவது அரிதுதான். ஆயினும், நான் சென்னைக்காரன், பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்று நீங்கள் கூறிக்கொள்வதால் பெருமை ஏதுமில்லை. அதற்கு மாறாக, நீங்கள் நான் இந்தியன், இந்திய ஜாதியைச் சேர்ந்தவன், தேசபக்தி உடையவன் என்று கூறிக்கொண்டால் அதற்குப் பெருமை உண்டு.

என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைபிடிக்க முயன்று வருகிறேன்" நான் வங்காளத்தில் பிறந்தவள். ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள், ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணந்தேன்; இல்வாழ்க்கை நடத்தினேன்; ஆனால் நான் வங்காளி அல்ல; நான் ஒரு இந்தியப்பெண்!