நாகப்பன் இரங்குதல்
‘சுற்றத்தில் பகைவந் துற்றுச்
சுகம்முற்றும் அற்றோம்' என்று
முற்றத்தில் வந்து நின்று
மூங்கைபோல் விழித்தான் மூடன்.
'செற்றத்தில் வெல்ல லுற்றுச்
செய்தநம் முயற்சி யெல்லாம்
குற்றத்தில் முடிய நேரக்
கூடுமோ' எனவும் நொந்தான்.
'ஏன் செய்தேன் இவ்வா' ரென்றான்;
'என்னினிச் செய்வ' தென்றான்;
'தான்செய்த தற்கு மாறாய்த்
தம்பிசெய் வானோ?' என்றான்;
'நான்செய்த செயலில் யாதும்
நல்லதே இல்லை என்றான்;
‘ஊன்செய்த உடலை விட்டின்
றுயிர்நீங்கின் சுகமோ?' என்றான்.
மிகைசெய்து நானே முந்தி
மெத்தவும் தீங்கு செய்தும்
பகைசெய்து திருப்பி ஏதும்
பண்ணாமல் அவனி ருந்தால்,
நகைசெய்து ஞாலம் என்னை
நன்றாகத் தூற்றும்; என்ன
வகைசெய்து வாழ்வேன் நெஞ்சு
வருந்தாமல் இனிநான்,' என்றான்.
62