பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்-2 வருணனை வளம் காவியங்களிலும் இதிகாசங்களிலும் வரும் வருணனைகள் அவற்றின் 'வண்ணக்கோலங்களாக' அமைந்து அவற்றிற்குச் சுவையூட்டுகின்றன; படிப்போருக்கும் மகிழ்ச்சியை நல்குகின்றன. இந்த வருணனைகள் எல்லாம் மரபுக் கவிதைகளில் அமைந்தவை. மரபுக் கவிதைகள் சொல்லாட்சிக்குப் பெயர் போனமையால் அவை ஆங்கெல்லாம் அற்புதமாக அமைந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. வாலியாரின் பாண்டவர் பூமி புதுக்கவிதையில் அமைந்திருந்தபோதிலும் அங்கும் சொல்வளத்திற்குக் குறைவில்லை. வாலியாருக்குச் சொல்வளம் கைவந்த சரக்கு. பாண்டவர் பூமியில் வருணனைகள் அமைந்திருக்கும் நேர்த்தியை நோக் குவோம். நம் நோக்கும் சில தலைப்புகளில் அமைகின்றது. 1. இயற்கை இயற்கை ஐம்பெரும் பூதங்களால் ஆனது. அவற்றில் இப்பூமி அழகு கொழிக்கும் அற்புத உருண்டை. இப்படி அழகு கொழிப்பதற்குக் கதிரவனே முதற் காரணம். இதனால்தான் பாரதியார் கதிரவனைக் காதலனாகவும் பூமியைக் காதலியாகவும் காண்கின்றார். இந்த இரண்டும் இணங்கி இணைந்து இயங்குவதால்தான் இவ்வுலகிலுள்ள நிலைத்திணையும் இயங்குதிணையும் தோன்றி நிலை பெற்றுள்ளன. பூமியிலுள்ள தாவரங்கள் கதிரவன் ஒளியைக் கொண்டு வாழ்கின்றன. 2. பா. க. ஞாயிறு வணக்கம்-3