பக்கம்:கவிதை உள்ளம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தாண்டு வாழ்த்து!

புத்தாண்டு பிறந்ததிவண் பூவுலகில் நலம்பெறவே
எத்தாலும் இன்பநலம் எய்துவதற் கியைந்ததுவே!
சாத்தாகிச் செல்வமுடன் சாற்றுமொரு உண்மையுடன்
புத்தான நலம்பலவும் பொருந்தி உயர்ந் தோங்குகவே!

எவ்வுயிரும் இன்பநிலை எய்துவதற் கையமிலை
எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணிநலம் பற்றிடுக!
எவ்வுயிரும் இவ்வுலகில் எய்துபல நலன்களெல்லாம்
உய்வழியில் பெற்றென்றும் ஓங்குகவே உயர் நிலத்தே!

தமிழன்னை தன்னருளால் தமிழ்மக்கள் எல்லோரும்
அமிழ்தெனவே அருஞ்செயல்கள் ஆற்றி உயர் ஆகிடுக!
தமிழ் மொழியும் தனிப்பெருமை தாரணியில் உடன் கொண்டு
நமதென்றே எல்லோரும் நாடிடவே ஓங்குகவே!

உள்ளத்தில் உண்மை ஒளி உற்றுநலம் பெற்றிடவும்
கள்ளத்தைக் கொள்ளாத கருத்துடைய நன் மொழியால்
பள்ளத்தில் சென்றிடுநற் பாய்புனல் போல் அன்புடனே
விள்ளற்கு அரிய புகழ் மேவி உயர்ந் தோங்குகவே!

பிரமாதி எனுமாண்டு பிறந்ததுகாண் பெருநிலத்தீர்
உரமான செயலியற்றி உயர்பணிகள் பல புரிந்து
பெருமானாம் எங்குநிறை பெரியோனின் அடிபணிந்து

திறமான நல்வாழ்வில் சிறந்தினிது ஓங்குகவே!

136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/138&oldid=1388637" இலிருந்து மீள்விக்கப்பட்டது