பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

புரியாமல் போயிற்று. இவர்கள் என்னைப் புறக்கணித்து விட்டனர். முற்றும் மறந்து விட்டனர். காரணம் - இவர்களைப் போல், செல்வத்தின் பால் ஆசை கொண்டு பலவீனமானவர்களைத் தோலுரித்து பணம் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆதலால் ஓ... மரணமே மக்களுக்குத் தேவையற்ற நான் உனக்கும் வேண்டப்படாதவன் ஆவேனோ?

உன் இதயத்தில் என்பால் அன்பென்றும் அழுது ததும்பி வழிந்து கொண்டிருக்கிறது, வா...! விரைந்து வந்து என்னை ஆரத் தழுவிக் கொள். உன் அணைப்பில் என் அமைதியான உறக்கம் ஆரம்பமாகட்டும்.

என் அன்னையின் இனிய முத்தங்களின் சுகத்தை நான் அறிந்தேனில்லை. ஒரு சகோதரின் உச்சியை முகர்ந்தேனில்லை. ஒரு மனைவியின் அன்பில், காதலில் மூழ்கித்திளைத்தேனில்லை. ஓ...! என் இனிய மரணமே! இவை அனைத்துமான மகிழ்ச்சிக்குரிய என் அருமை நண்பனே, வா... விரைந்து வா... உன் தாலாட்டில் நான் உறங்கவேண்டும்.

இந்த மாபெரும் கவிஞனின் 'தீர்க்கதரிசி' என்னும் நூலிலிருந்து ஒரு சிறுபகுதியை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதை வெண்பாக்களாக இயற்றி இந்த சிறு தொகுப்பில் சேர்த்துள்ளேன். இது ஒரு குறையாகவோ குற்றமாகவோ தமிழ்கூறு நல்லுகம் கருதாது என்றும் நம்புகிறேன்.

கலீல் ஜிப்ரான் கவிதையில் ஒப்பற்ற இமயம்; நான் ஒரு சிறிய குன்று; ஆனால், ஏறக்குறைய நானும் அவருடைய அதே நிலையில்தான் இருக்கிறேன்; தெளிந்த உள்ளத்துடனும், அச்சமற்ற நிலையிலும் அமைதியுடனும் என் வாழ்நாள் இறுதியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. மனித நேயமிக்க மனிதனாக, ஒரு உண்மை கவிஞனாக வாழ்ந்த வாழ்வை நினைத்து நிறைவான இதயத்தோடு, என் பயணம் தொடரும்.

வெள்ளியங்காட்டான்