பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

குழந்தையைக் காணோம்

குழந்தையொன்று வேண்டுமெனக் கூறக் கொண்டாள்
குவலயமே மகிழவொரு குழந்தை தந்தாள்!
பழந்தமிழும் கொழுந்தோடிப் படர்வ தென்னப்
பாலகியை நான்பரிவாய் வளர்த்தேன்; காலை
எழுந்துவெளி யேசெல்ல இருந்தேன்; என்னை
எடுத்துக்கொள் ளென்றதுவந் தியலா தென்றேன்
விழுந்துபுரண் டழலானாள்; வெளியே சென்றாள்;
வீட்டுக்கு வரவில்லை; - எங்கோ காணோம்!

பசுவுக்குப் புல்வாங்கப் பைசா வின்றிப்
பரிதவித்துக் கொண்டிருக்கும் போதும் வந்து:
குசுகுசெனச் செவியருகில் குனிந்து, 'தங்கக்
குனுக்கொன்று வாங்கித்தா அப்பா!' என்றாள்.
வசியம்செய் புன்முறுவல் வழங்கு மந்த
வடிவழகென் னுளமுருக்க, 'முடியா' தென்றேன்
விசித்துவிசித் தழலானாள்; வெளியே சென்றாள்;
வீட்டுக்கு வரவில்லை. - எங்கோ? காணோம்!

கொத்தாரும் பூம்பொழிவில் கூடி யாடிக்
குடுகுடென வந்தெனது மடியில் குந்திச்
செத்தாருக் குயிரூட்டும் தமிழ்வாய் தன்னில்
தேனெழுக இளங்குதலை, மொழியா 'லப்பா!
முத்தாரம் வாங்கித்தா என்றாளம்மா!
முடியாதென் னாலென்றே னுடனே பொத்தல்
சித்தாடை யால் கண்ணை யொற்றிக் கொண்டே
சென்றவள்தான் வரவில்லை: - எங்கோ? காணோம்!

122