பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

தாண்டித்த தெதற்கெனவும் தான்சொல் லாதென்
தலைதாழ்த்தி வைத்துவிட்டுத்தாரா சென்றாள்;
ஏனடித்தாள் ஏனடித்தாள் எனவி னாவி
இடையீடில் லாதென்வாய் இதயந் தன்னைத்
தேனடைத்த அடையென்னத் திகழு மாறே
தினையளவும் இடமின்றித் துளைக்க விட்டு,
நானிடித்த புளியெனவே இருந்தேன் குந்தி
நள்ளிரவு கடந்தபின்பும் நலிவோ னாகி!

பாதிதுயர் பாதிவெறுப் பாகப் பண்ணிப்
பரதவிக்கச் செய்த இரா பாழாய்ப் போகக்
கோதியதன் னிருசிறகும் புடைத்துக் கோழி,
'கொக்கரக்கோ ' எனக்கூவிக் கூற வேயென்
வேதனையும் வேரறுந்த மரம்போல் நெஞ்சை
விட்டுவிழ வெளிக்கதவை மூடினேன்நான்.
காதலெனும் சொல்கேட்கச் சொல்லக் காணக்
கருதிடவும் கடுவென்னக் கசந்த வாறே.

சொல்லரசி யல்லிகதை படிநீ யென்று
சொல்லியசொல் சுருக்கென்று தைத்த தேயோ!
மல்லரசி யாகியிவள் எனது கன்னம்
மாங்கனிபோல் வீங்கவைத்து மறைந்தா ளென்றால்,
கல்லரிசி கலந்தட்ட சோற்றை யொப்பக்
கடைவாய்ப்பல் லுதிருமன்றோ கால கண்டி
இல்லரசி யாயிருந்தால்! இவளி யல்பை
இவ்வாறு வெளிப்படுத்திற் றெனது நல்லூழ்!

44