பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

'கன்னங் குழியும் எழில் - இனிய
கற்கண்டு போல் மொழிகள்
புன்னகை பூத்த முகம் - யாவும்
போக்கினை கெட்டெனவே
என்னருந் தோழியர்கள் - கூடி
ஏளனம் செய்வதெலாம்
பன்னி எழுதுவனேல் - அதுவோர்
பாரத மாகி விடும்!

பருவ மடைந்ததன்பின் - திருமணம்
பண்ணி முடிந்ததன் பின்
வரவும் செலவுமின்றிக் - கிடந்து
வாழ்க்கைத் துணைவர்களின்
பிரிவில் வருந்துகிற - அன்புப்
பெண்க ளனைவருக்கும்
இரவின் திரைமறைவில் - காலன்
இருப்ப தறிகிலிரோ!

காதல் கணவனுமைப் - பிரிந்து
கண்ணைக் கசக்குகிற
பேதை மதியுடைய - சொந்தப்
பெண்டின் துயரறியீர்!
'வேதனை விட்டிருநீ' - என்று
விளம்பல் எளிதுமக்கு
சாதல் அதைவிடவும் - எளிது
சதிகளுக் கென்றறிவீர்!

67