பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

13


மேதைகள் எல்லாம் பலதுறைகளிலும் பலவாறு பங்களித்துள்ளனர்.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கொல்கத்தா மாநகரிலே, 1861-ஆம் ஆண்டில், தாகூர் எனும் செல்வாக்கான குடியிலே தோன்றினார்! தந்தை பெயர் தேவேந்திர நாத் தாகூர்; அவர் உயர்ந்த பண்பாளர்; சிறந்த அறிஞர்; எல்லாரிடமும் மனித நேயத்தோடு பழகும் நல்ல உள்ளம் பெற்றவர்!

தேவேந்திர நாத் தாகூர் சற்றேறக் குறைய வங்காளத்துக்கு குசேலரோ என்னவோ, பதினான்கு பிள்ளைகளுக்கு தகப்பனாராக விளங்கினார். குழந்தைகளை ஆடம்பரம் ஏதுமில்லாமல் எளிமையோடு வளர்த்து வந்தார். தந்தை எவ்வழியோ அவ்வழியே- அவரது மக்களும் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.

ரவீந்திரர் தனக்குரிய விளையாட்டுப் பொருட்களைத் தாமே தயாரித்துக் கொள்ளும் புத்திசாலியாக சிறுவயதிலேயே விளங்கி வந்தார். தேவேந்திர நாத் தாகூரின், எளிமையான, சிக்கனமான, ஆடம்பரமற்ற வாழ்க்கை அவரது மக்களையும் தங்களை அறியாமலேயே, பின்பற்றிடச் செய்தது.

ரவீந்திரர் வெளியுலகம் தெரியாத குழந்தையாகவே வளர்ந்தார். எந்நேரமும் தனது வீடு, முற்றம், பின்புறத் தோட்டம் என்றே விளையாடிக் காலம் தள்ளுவார். தனது வீட்டுத்திண்ணையிலே அவர் உட்கார்ந்து கொண்டு, வீதியிலே போவோர்-வருவோர், வண்டி-வாகனங்கள் மக்களிடையே மூளும் சண்டை சச்சரவு குழப்பங்கள் போன்றவற்றைத்தான் அவர் பார்த்துரசிப்பார்!