பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

23



தாகூர் எழுதிய பாடல்களிலே இன்பவியல் சம்பவங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால், துன்பவியல் கருத்துக்களும், சம்பவக் கோர்வைகளுமே அதில் குவிந்து கிடந்தன! சோக நிகழ்ச்சிகளை அவர் அழகாக எழுதுவதையே தனது கொள்கையாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் பள்ளியின் தலைமையாசிரியர் ரவீந்திரரை அழைத்து, ‘தாகூர் நீ பாட்டு எழுதுவதாக உன்னுடன் படிக்கும் நண்பர்கள் கூறுகிறார்களே, இது உண்மைதானா?’ என்று கேட்டு, ஒரு பொருளைத் தலைப்பாகக் கொடுத்து ‘இதைப் பற்றி எழுது பார்ப்போம்’, என்று கேட்டார்!

உடனே ரவீந்திரர், அவர் எதிரிலேயே, அந்தப் பொருளைப் பற்றிய பாடலொன்றை எழுதி, பாடியும் காட்டினார். வகுப்பு மாணவர்கள் கையொலி எழுப்பி மகிழ்ந்தார்ள். பொறாமை மனங்கொண்ட ஒரு சில மாணவர்களும் இருந்தனர்.

அவர்களில் ஒருவன் எழுந்து, தலைமையாசிரியர் முன்பே, ‘இந்தப் பாடல் ரவீந்திரன் எழுதியதன்று; புத்தகங்களில் ஏற்கனவே படித்து மனப்பாடம் செய்து வைத்திருந்த கருத்துக்களைப் புகுத்தி அடுக்கிக் காட்டியது போல இருக்கிறது என்றான்.

ஆனால், ஆசிரியர், அந்த அழுக்காறுப் பேச்சை நம்ப வில்லை. நான் திடீரென்றுதானே உங்கள் கண்ணெதிரே பாடல் தலைப்பைத் தந்து பாடல் எழுதுமாறு கேட்டேன். உங்கள் எதிரிலே அல்லவா எழுதிய பாடல் இது? இதை எப்படிக்குறை கூறிட உங்களுக்கு மனம் வந்தது? என்று கேட்டுவிட்டு, ரவீந்திரரைத் தன்னருகே அழைத்து, தழுவி, தட்டிக்கொடுத்துப் பாராட்டி, ‘ரவீந்திரா, மேலும் முயற்சி செய்!உனக்கு எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்’ என்று அனுப்பி வைத்தார்.