பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

25



வீட்டுக்குள் நடக்கும் நாடகத்தையே பார்க்க விடாத ரவீந்திரரின் குடும்பத்தார், பிறகு எப்படி வெளியிடங்களுக்கு அவரை அனுப்பி வைப்பார்கள்? இதனால், அவர் பூட்டிய இரும்புக் கூட்டுக்குள் அடைபட்ட சிங்கமாகவே காலம் கழித்து வந்தார். கல்கத்தாவிலே ஒடும் ரயிலிலே கூட அவர் ஏறிப் பார்த்ததில்லை, பாவம்!

முதல் இரயில் பயணம்

தேவேந்திர நாத் தாகூர் ஒரு முறை போல்பூர் என்ற நகருக்கும், அங்கேயிருந்து இமயமலைச் சாரலுக்கும் போக வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால், தனது கடைசி மகன் ரவீந்திரரை அவர் உடன் அழைத்துச்சென்றார். அப்போதுதான், ரவீந்திரா் முதன் முதலாக வெளியுலகைக் காணும் நிலை யேற்பட்டது. முதல் முறையாக அப்போதுதான் ரயில் வண்டி ஏறிப் பயணமும் செய்தார்! அந்த அனுபவம் அவருக்கு அளவில்லா ஆனந்தத்தை அளித்தது. மகிழ்ச்சி உண்டானது மட்டுமன்று; ரவீந்திரர் அண்ணன்மார்களில் ஒருவரான சத்யா என்பவர், ரயிலில் பயணம் செய்வது பெரிய ஆபத்தானது; ரயில் நடுங்கும், கர்ஜிக்கும் நினைத்தால் உலுக்கும்; குலுக்கும்! முடிந்தால் பள்ளத்திலே கூடத் தள்ளிவிடும்; புகையைக்கக்கும்; கண்களைக் கசக்கும் படியான கரித்தூள்களை நம்மேலே வாரி வீசும் என்றெல்லாம் பயங்காட்டி இருந்தார்! சிறுவரல்லவா ரவீந்தர்! அதை அப்படியே நம்பிவிட்டார்! அதற்கேற்ப அனுபவம் இல்லை. அந்தப் பயத்தை எல்லாம், தந்தையுடன் சென்ற போல்பூர் ரயில் பயணம் தகர்த்தெறிந்ததைக் கண்டு பேரானந்தம் அடைந்தார்.