பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்


களையும், தவறான வினாக்களையும் கேட்டு வாதாடுவார். அந்த நேரங்களிலே எல்லாம் ஒரு தந்தையின் கடமையை உணர்ந்த தேவேந்திரா், பொறுமையாகவும், பொறுப்பாகவும் கோபப்படாமல், எரிச்சல் அதட்டல் உருட்டல் ஏதும் காட்டாமல், மகனுடைய அறிவு வளர்ச்சிக்கு இடம்தந்து, தவறான கேள்விகளைச் சுட்டிக்காட்டி, விளக்கமளித்து மகனை திருப்திப்படுத்தி நிறைவு செய்வார்.

ரவீந்திரரின் அறிவில் அஞ்சாமையும், நேர்மையும் இருந்ததை அவருடைய பேச்சிலும், எழுத்திலும் இன்றும் நம்மால் காண முடிகின்றது. அது மட்டுமன்று, எதையும் எப்போதும் அவராகவே எண்ணிப் பார்க்கும் தெளிந்த சிந்தனைத் திறனும் இருந்தது.

இமயமலைச் சாரலைவிட்டும், சாந்தி நிகேதனத்திலிருந்தும், தந்தையும்-மகனும் கல்கத்தா நகருக்கு மீண்டும் வந்து சேர்ந்தார்கள். தேவேந்திரர் தனது செல்வன் ரவீந்திரரை,கல்கத்தா நகரிலே உள்ள புகழ்பெற்ற செயிண்ட் சேவியர் கல்லூரியிலே சேர்த்தார்.

கல்கத்தா நகர் சூழ்நிலை கல்வி கற்க ஏற்றவாறு வசதியாக அமைந்திருந்தது. அவருடைய மனநிலைக்கேற்றவாறு செயிண்ட் சேவியர் கல்லூரியில் போதனைகளும் இருந்தன. ஆங்கில வகுப்பு ஆசிரியர் ஒருவர், உலகப் புகழ்பெற்ற நாடகச் சக்கரவர்த்தியான ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மாக்பெத்’ என்ற நாடகத்தை வங்காள மொழியிலே மொழி பெயர்க்குமாறு கூறினார்.

ரவீந்திரரின் நெஞ்சைவிட்டு, இமயமலைச் சாரல்களின் இயற்கைக் காட்சிகளும் பேரின்பங்களும், அகலவில்லை.