பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவியரசர்
இரவீந்திரநாத் தாகூர்

தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர்

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது!

அரசியல் அரங்குகளிலும், மக்கள் அவைகளிலும், அரசு அலுவல்களிலும், அறிவியல் துறைகளிலும், நாடகமேடைகளிலும், இலக்கிய விழாக்களிலும் அழகுத் தமிழோசை கேட்ட வண்ணம் உள்ளது.

பல்கலைக் கழகக் கல்வியையும், பழகு தமிழில் பயிற்றுவிக்க முடியும் என்ற முயற்சி நாட்டில் நடை பெற்று வருகின்றது.

எல்லாம் தமிழ்மொழியால் முடியும் என்ற எண்ணம், இன்று எல்லாத் துறைகளிலும் உறுதிப்பட்டுள்ளது.

ஆனால், எண்பது ஆண்டுகளுக்கு முன்னர்; இத்தகைய தாய்மொழிப் பற்றுணர்வைக் காண்பதரிதாகவே இருந்தது. தமிழ் மொழியிலே பேசுவதும், எழுதுவதும் கூட இழிவாகக் கருதப்பட்ட காலம் அது.