பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

87


என்ற ஆங்கிலேயரும் துணையாகச் சென்றார். அவர் கிராமத் தொண்டுகள் செய்து பழக்கப்பட்டவராவார்.

இந்தியா கிராமங்கள் நிறைந்த ஒரு விவசாய நாடு. இங்கே கிராமங்கள் முன்னேறா விட்டால் இந்தியா முன்னேறுவது என்பது வெறும் பகற்கனவு என்று நம்பியவர் தாகூர். விசுவபாரதி என்ற கலைக்கழகத்தில் ‘கிராமத்தொண்டு’ என்பதையும் மாணவர்களுக்குரிய ஒரு பாடமாக வைத்தார்.

சாந்திநிகேதன் அருகில், இரண்டு மைல் துரத்தில் ‘இருள்’ என்ற சிற்றுரில் தனக்குரிய வீட்டைத் தலைமை நிலையமாகக் கொண்டு, ‘ஸ்ரீநிகேதன்’ என்ற கிராமத் தொண்டு நிலையத்தை 1922-ஆம் ஆண்டு தொடங்கினார் தாகூர்!

அந்தத் தலைமை நிலையத்தைச் சுற்றி நூல் நிலையம், அலுவலகம், தொண்டர்களுக்குரிய வீடுகள் போன்ற வசதிகளைத்தாகூர் அமைத்தார் உழவுத்துறையில், அவ்வூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் முன்னேற வேண்டும் என்றார். நெல்லும், கரும்பும் சிறப்பாகப் பயிரிடப்பட்டன. மரங்கள் நடப்பட்டுச் செழித்தன! கிராம மக்களுக்கான கூட்டுறவுக் கழகங்கள் பல உருவாயின.

கிராம மக்கள் அனைவரும் அக் கழகத்தில் உறுப்பினரானார்கள். இந்த கழகத்தின் மூலம் கிராம சுகாதாரத்திற்கும், மருத்துவமனைக்கும் நிதி ஒதுக்கி செலவிடப்பட்டன. வைத்தியத்திற்கு என்று கட்டணம் கட்டத் தேவையில்லை. மருந்துவர்கள் அந்தந்தக் கிராமத்திலே கிராம மக்களுள் ஒரு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். நோய் வந்த பிறகு மருந்து தரும் பணியில் ஈடுபடாமல், வருவதற்கு முன்னரே மக்களுக்கு மருந்துகள் வழங்கப்படும் வழக்கம் வளரலாயிற்று.