இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முதற் பதிப்பின்
முன்னுரை
தமிழ் மொழியில் புதிய மலர்ச்சி தோன்றி யுள்ள காலம் இது. பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக இருந்தாலும் புதிய துறையில் உரைநடை இலக்கியங்கள் இந்த நூற்றாண்டில் தோன்றி வளரலாயின. உலக முழுவதுமுள்ள பல்வேறு மொழிகளிலும் உரைநடை இலக்கியங்களே பெரு வெள்ளமாக இப்போது வந்து கொண்டிருக்கின்றன.
ஆயினும், தமிழில் புதிய கவிதைகளைப் பாடும் ஊக்கத்துக்கும் குறைவில்லை. சில காலமாக இந்த ஊக்கமும் முயற்சியும் பல மடங்கு பெருகி விட்டன. மேடையில் பேச வேண்டும் என்ற அவா எவ்வாறு பலருக்கும் உண்டாகியிருக்கிறதோ, அவ்வாறே கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வமும் இப்போது பலருக்கு உண்டாகி வளர்ந்து வருகிறது. பத்திரிகைகள் கவிதைகளை வெளியிடுவதோடு, அங்கங்கே அடுத்தடுத்துக் கவியரங்கங்கள் நடை பெறுகின்றன.