9. எண்சீர் விருத்தம்
தமிழில் சித்தர் பாடல்கள் என்று ஒரு வகையான நூல் உண்டு. போகர், அகத்தியர், ரோமரிஷி, புலிப்பாணி என்பன போன்ற பெயர்களையுடைய சித்தர்கள் உண்டு. பதினெண் சித்தர் ஞானக்கோவை என்ற நூலில் சித்தர் பாடல்கள் எனப் பல வகைப் பாடல்களைக் காணலாம். வைத்திய நூல்களில் பல, சித்தர் பாடியவை.
சித்தர் பாடல்களில் பெரும்பாலானவை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவே இருக்கின்றன. பாடுவதற்கு எளியது இந்த விருத்தம். ‘கேளப்பா, ஆளப்பா’ என்று எதுகையில் தொடர்கள் வரும் பாடலைப் பார்த்தால், சித்தர் பாட்டென்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். ‘பாரதி அறுபத்தாறு’ என்பதில் உள்ள கவிகள் எல்லாம் இவ்வகையைச் சார்ந்தனவே.
இந்த வகை விருத்தத்தில் ஒரடியில் முதல் பாதியும் மறு பாதியும் ஒத்து நிற்கும்; ஆதலால், ஐந்தாவது சீரில்-அதாவது இரண்டாவது பாதி தொடங்கும் இடத்தில் மோனை அமையும்.
காப்பியமும் தோத்திரமும் புலவர் பாடிக்
கவின்செய்யப் பேரழகு பூண்ட அன்னை, யாப்பியலும் அணிஇயலும் பொருளின் பாங்கும்
இனிமையுற அமைந்தசெல்வி, மன்னர் பல்லோர் பாப்பயிலத் தொண்டுகொண்ட தெய்வப் பாவை, *.
பழம்புலவோர் குழுவருளைப் பெறவைத் தாண்டு பூப்பயிலும் பெரும்புகழ்சேர் தமிழாம் தேவி -
புதுமலர்த்தாள் சிரம்வைத்துப் போற்றி வாழ்வாம்.