42
ஏழை - ஆப்பிள் - நட்சத்திரம்
"ஐ காண்ட் வேஸ்ட் மை டைம். அவள் இப்படி அடிக்கடி லேட்டா வர்றாள். நீங் அவள்கிட்ட பங்சுவாலிட்டியைப் புரிய வைக்கணும். ஐ காண்ட் வேஸ்ட் மை டைம்" என்று சொல்லிக் கொண்டே நடந்தவர், முகத்தில் புன்னகை தவழத் திரும்பி வந்தார். கதாநாயகி நடிகை நளினி குமாரி, ஓர் இம்பாலா காரில் தன் அம்மாவோடும், பணிப் பெண்ணோடும் ஒரு நாயோடும் வந்து இறங்கியதே காரணம்.
நடிகை நளினி குமாரி கமலனுக்கு அருகே தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே “சாரி லேட்டாயிட்டுது” என்றாள்.
"அதுக்கென்ன. அப்படி ஒண்ணும் லேட் இல்லை. நானும் இப்பதான் வந்தேன்' என்றார் கமலன்.
“படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமா?” என்றார் டைரக்டர், வினயமாக. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்களுக்கு ஆப்பிரிக்கா போக அழைப்பு வந்திருக்காமே? என்றார் கமலன் நளினியிடம். அதற்குள் புரொடக்ஷன் மானேஜர், “படப்பிடிப்பை துவக்கலாமா?” என்று கேட்டார்.
"மிஸ்டர் டைரக்டர் இந்த ஆசாமி என்ன புதுசா? சும்மா தொன தொனத்துக்கிட்டு இருக்கான். கொஞ்சம் சொல்லி வையுங்க..." என்றார் கமலன்.
லைட்பாய் நாராயணனுக்கு ஒரே ஆத்திரம். படப்பிடிப்பு முடியுமுன்னால் அவன் கீழே இறங்க முடியாது. குழந்தைக்கு இப்போது எப்படி இருக்கிறதோ...
ஒரு வாலிபன் லெட்டை நெருங்கி வந்து, "ஐ ஆம் ஸெண்ட் பை ஐ.டி.ஒ." என்றான். இன்கம்டாக்ஸ் ஆபீஸில் இருந்து வருகிறான்? அட பாவி கமலன், நளினி எல்லோரும் எழுந்து நின்றார்கள். கமலனும், நளினியும் எழுந்து நின்றதால் ஐ.டி.ஒ விற்கு எந்த ஜென்மத்திலும் சம்பந்தமில்லாத துணை நடிக நடிகைகளும் எழுந்தார்கள்.
அந்த வாலிபன் ஒரு அதிகாரிக்குரிய புருஷ லட்சணத்தோடு "நீங்க தான் மிஸ்டர் கமலனா? இவங்கதான் மிஸ் நளினியா?" என்றான்.
“ஸார், ஏதாவது சாப்பிடுகிறீர்களா? நளினி தனக்கே உரிய பாணியில் குழைந்தாள்.