காகித உறவு
55
வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டே, அரசியல் வானில் நட்சத்திரமாக ஜொலிக்க நினைத்த அந்த ஏழை கோபால், எரி நட்சத்திரமாய், ஒரு தாலுக்கா அலுவலகத்தில், கீழ் நிலை எழுத்தாளராக, கீழே விழுந்தான்.
அன்று வெள்ளிக்கிழமை; சனிக்கிழமை அல்ல. தாசில்தார் முன்னால் ஒரு பைலை வைத்துவிட்டு, நழுவப்போன கோபாலை, ஆபீசர் கண்களால் எடை போட்டுக் கொண்டே, 'கோபால் ஒன்னைத் தாய்யா, தூங்குமூஞ்சி! கலெக்டருக்கு அனுப்பணுமுன்னு சொன்னேனே, அந்த ஸ்டேட்மெண்ட் எங்கே? அதை... டைப் அடிச்சிட்டியா...' என்றார்.
'இல்ல ஸார். இன்னும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள், பர்ட்டிகுலர்ஸ் தரல்லே...'
'நீங்கள்ளாம் ஏன்யா வேலைக்கு வர்றீங்க? ரெண்டு எருமைமாட்ட மேய்க்கலாம். எத்தனை தடவய்யா, ஒனக்குச் சொல்றது? கலெக்டர் டி-ஒ' லட்டர் வேற எழுதிட்டார். இன்னும் ஆக்க்ஷன் எடுக்காமல் இருக்கறியே, சென்ஸ் இருக்கா? ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கா? ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களை வரச் சொல்லி, ஒரு மெமோ வைக்கிறதுக்கு என்ன? நான்சென்ஸ்...!
கோபால், கோபமாக அவரைப் பார்த்து விட்டு, பின்பு தன் செல்லாக் கோபத்தை பொறுமையாக்கிக் கொண்டு உயரமான தன் உடம்பை, கூனிக் குறுக்கி, நெளித்தான். எந்த அரசியல் வாதிகளை நம்பி இருந்தானோ, அந்த அரசியல்வாதிகளால் தலையினின்று கழிந்த முடிபோல் கருதப்பட்ட அவனால், ஒன்றும் செய்ய இயலாது. அதோடு, ஏற்கெனவே ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கும் அவன் அப்பா - அம்மாவையும் தம்பி தங்கைகளையும் இதற்குமேல் ஏய்க்கக் கூடாது. போதாக் குறைக்கு அவனுக்குக் கல்யாணம் வேறு நிச்சயமாகப் போகிறது.
கோபால் அமைதியாகவும் அழப்போகிறவன் போலவும் இருப்பதைப் பார்த்துவிட்டு படுகளத்தில் ஒப்பாரியைக் கேட்கக் கூடாது என்ற பழமொழியை 'பைல் களத்தில்.நாகரீகமாகப் பேசக் கூடாது' என்று. புது மொழியாக்கிக் கொண்ட தாசில்தார்கூட இரக்கப்பட்டவர் போல் பேசினார்.
சரி சரி, நாளைக்குள்ளே, ஸ்டேட்மென்டை ரெடி பண்ணிடு. நாளைக்கே, மெசஞ்சர் மூலம் கலெக்டரிடம் சேர்த்துடணும்.'
கோபால் திக்கித் திணறிப் பேசினான்.