பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

காஞ்சி வாழ்க்கை


கூட்டத்துக்கு வரவில்லை என விளக்கினேன். என் உள்ளம் அவர் நன்கு அறிந்த ஒன்றாதலால் அவன் புன்சிரிப்போடு அமைந்துவிட்டார்.

அதே காலத்திற்குச் சற்றுமுன் நடைபெற்ற மற்றொன்றும் நிழலிடுகின்றது; அவ்வாறு கழகம் கலைக்கச் சில தினங்களுக்குமுன் என எண்ணுகிறேன். தாம்பரம் நகர் அமைப்பு எங்கள் கழகச் சார்பில் அமையத் தொடங்கிற்று. பல ஏக்கர் நிலங்களை வாழ் மனையாக்கிப் பலருக்குப் பகிர்ந்து கொடுத்து, புதுப்புதுத் தெருக்கள் அமைத்தனர். அத் தெருக்களுக்கெல்லாம் அக்காலத்தில் கழக உறுப்பினர்களாகிய எங்கள் பெயர்களை இடவேண்டுமெனவும் முடிவு செய்தனர். ஆயினும் நான் தனியாக எங்கள் கழகத் தலைவர் திரு. துரைசாமி ரெட்டியார் அவர்களை, ஆலந்தூரில் அவர்கள் வீட்டில் கண்டு என் பெயரை எந்தத் தெருவிற்கும் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் முதலில் மறுத்த போதிலும் பிறகு இசைந்தார். அதனாலேயே தாம்பரம் பெரியார் நகரில் என்னுடன் இருந்த உறுப்பினர் பெயர்களிலெல்லாம் தெருக்கள் இருக்க என் பெயரில் மட்டும் தெரு இல்லா நிலை தோன்றிற்று, பின் கேட்ட பல அன்பர்களுக்கு இதுபற்றியெல்லாம் விளக்கம் கூறினேன்.

போர் வரவர அதிகமாகிக் கொண்டே வந்தது. உலக மக்கள் அனைவரும் அஞ்சினர். மக்கள் வாழ்க்கைப் பொருள்கள் கிடைக்கா நிலை உண்டாயிற்று. பொருளாதார நெருக்கடி காரணமாகப் போருக்குமுன் மக்கள் குறைந்த விலையில் எல்லாப் பொருள்களையும் பெற்று வந்த நிலைமாறி, அனைந்தும் விலை ஏறியும் கிடைக்கா நிலைமை உண்டானமையால் மக்கள் வருந்தினர். அரசாங்கம் எவ்வளவோ முயற்சிகள் செய்து கூடிய வரையில் மக்கள் வாழ்வின் இன்றியமையாத் தேவைகளைத் (உடை, உணவு) தந்து உதவினர். எனினும் உலகிலும் ஊரிலும் வீட்டிலும், உள்ளத்திலும், உணர்விலும் எங்கும் அமைதியற்ற பெருநிலையே காணப்பெற்றது.