பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

காஞ்சி வாழ்க்கை



னாரும் தாயாரும் எனக்கு ஊட்டிய அந்த உணர்வால் நான் அப்பணியினை ஏற்காது மறுத்ததோடு, உற்றவரையும் அத்துறையில் நுழைய வேண்டாமென வற்புறுத்தவேண்டிய நிலையில் இருந்தேன். ஆயினும் அந்தப் பதவியால் இடையில் பல வகையில் பயன் பெற்ற சிலர் அவரைச் சூழ்ந்து செயலாற்ற, அவரும் அந்தப் பதவிக்கு ஆசைவைத்து முயன்றார்-வெற்றியும் பெற்றார். எனவே நானும் என் மனைவியும் குழந்தைகளும் அவர்களோடு கொண்ட தொடர்பினைத் துண்டித்துக் கொண்டோம். பின்பு அத்தொடர்பு ஓரளவு திரும்ப வந்தேனும் அது முழு உள்ளப் பிணைப்பாக இல்லாமல், இறுதியில் என் மனைவியின் மறைவுக்குப் பின் அடியோடு அற்றுவிட்டது என்பதையும் இங்கே காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தச் சூழலில் என் நெருங்கிய சுற்றத்தார் எனக் கருதும் அவர்களும் தூரத்தே நின்று விடவே நான் வேறு வகையில் என் நாட்டத்தைச் செலுத்தவேண்டியவனானேன். ஊரிலேயும் ஒற்றுமை குறைந்த காரணத்தால் பயிர் வகைகளைச் செம்மையாகச் செய்ய முடியாத நிலை உருவாயிற்று. இந்த நேரத்தில் வாலாஜாபாத்தில் நான் பயின்ற பள்ளியின் பொறுப்பாளர் அப்பா. வா. தி. மாசிலாமணி அவர்களும் அங்கே செயலாற்றிய அண்ணு நா. ப. தணிகை அரசு அவர்களும் என்ன அங்கேயே வந்து பள்ளியில் தங்கிச் சில பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர். எனினும் அப்பாவுக்குப் பின் அப்பள்ளியின் நிலை என்னவாகுமோ என்ற உளத் தடுமாற்றத்தாலும் வேறு சிலருக்கு நான் அங்கே நுழைவதால் சில பலன்கள் கிட்டாது என்று அவர்கள் என் வருகையை விரும்பாததாலும் நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். எனினும் அப்பா அவர்கள் எல்லோரிடமும் நான் அப்பள்ளியில் சேருவதற்காகவும் அங்கே ஒரு தமிழ்க்கல்லூரி தொடங்குவதற்காகவுமே காஞ்சிபுரப் பணியைக் கைவிட்டேன் என்று கூறிவந்தனர். ஆயினும் என் சூழல் என்னைச் சென்னைக்கு ஈர்த்தது.