பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

19



வரப்பெற்ற ஐந்தாம் ஆண்டுதொடங்கி, பள்ளியிறுதி வகுப்பில் பயின்ற நாள்வரையில் சில நிகழ்ச்சிகளைக் குறித்துள்ளேன். இப் பகுதியில் என் வாழ்வில் எதுவரை எழுதுவேன் என்பது எனக்கே தெரியவில்லை. தொடங்கிய பணி எதுவரை என்னை ஈர்த்துச்செல்லும் என்பது எனக்கே புரியாத புதிராக உள்ளது. எனினும் எழுதத் தொடங்கி விட்டேன்.

முன்பகுதியில் குறித்தபடியே, என் வாழ்நாள் பூமேற் செல்லும் பொன்னாளாகக் கழியவில்லை. பார்க்கின்றவர்களுக்கு ஏதோ என் வாழ்வு பகட்டாகத் தோன்றினும், என் வாழ்வுப் பாதையில் கரடுமுரடான நெறிகளே அதிகம். என்னிடம் நெருங்கிப் பழகும் நண்பர்களும் அன்பர்களுமே அதை ஓரளவு அறிவர். எனது அன்னையால் வளர்க்கப் பெற்ற நான், அவர்கள் பழக்கியபடியே யாரையும் எதையும் அண்டி வேண்டாத நிலையில் வளர்ந்துவிட்டவன். சுந்தரர் பாடிய,

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன்
சிருடைக் கழல்களென் றுன்னி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனுய்த் திரிவேன்'

என்ற வடதிருமுல்லைவாயில் தேவாரமே எனக்கு உறுதுணையாக நிற்பது. ஆம் ! அதைப் பாடி, அச் சுந்தரரைப் போன்றே நான் கடந்த இன்னல்கள் பல. மற்றவர் தம் குறையை மறைத்து, எதிரில் முகத்துதிபாடி, அவர்தம் உதவியைப் பெறும் 'மனித' நிலை நான் அறியாதது. உள்ளதை உள்ளபடியே விளக்கிச் சொல்வதால் எத்தனையோ பெரிய மனிதர்களது பகையைச் சம்பாதித்துக் கொண்டவன் நான். எனினும் உறுதியும் ஒருவனை இறையருளும் பொருந்திய காரணத்தால் ஏதோ என்னால் சில நினைத்த காரியங்களைச் செய்யமுடிகின்றது. அவ்வாறு செய்து முடிந்தபின் திரும்பிப் பார்த்து எப்படி முடிந்தது?’ என்றுதான் நான் எண்ணுவது வழக்கம். அவ்வப்போது நான் பெற்ற நல்லுணர்வுகள் பலப் பல.