பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிகளின் தோற்றம்

65


கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சங்கத் தலைவர் அன்மையிலே பேசியிருப்பதைப் பார்த்தால் அந்தச் சங்கத்தினால் உலகத்தில் யுத்தம் வராமால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்கு எதிராக மூன்றாவது உலக யுத்தத்தைப் பற்றிய பேச்சும் இன்று கேட்கின்றது. அணுக்குண்டு செய்வதிலும், அதை ஊழிக் கனவாகவே உருவெடுக்கச் செய்வதிலும், நாடுகள் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அணுக்குண்டு ஆராய்ச்சியின் வேகம் நஞ்சுபோல ஏறிக்கொண்டிருக்கிறது. பல சிறந்த அறிஞர்கள் அதன் அச்சமூட்டும் விளைவைப்பற்றிப் பேசியுள்ளார்கள். எச். ஜி. வெல்ஸ், "இனிமேல் மனித இனம் உலகில் வாழ முடியாது" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். அவர் கூறியது போலப் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இதுவும் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டுமே என்று சிந்தனையாளர் சிலர் கவலைப்படுகிறார்கள். ஐன்ஸ்டைன் சொல்லுகிறார்: "அணுக்குண்டு யுத்தத்தால் மனிதக் கூட்டம் முழுவதும் அழிந்து போகாது; முக்கால்வாசி கழியலாம்; காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் சாதியார்கள் மிஞ்சுவார்கள்." "இனிமேல் யுத்தம் என்றால் துப்பாக்கி எடுத்துச் சுடவேண்டியதில்லை; ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். உலகம் தவிடு பொடியாகிவிடும்", என்ற பேச்சு இன்று சாதாரணமாகிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் வைத்துத்தான் காந்தியடிகளின் தோற்றத்தை நாம் எண்ணிப் பார்க்க