பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெனனப் பெரும் பேச்சு

89

அரவவனப்பிலும் தவழுமாறு திறமை காட்டுகிறான். இப்பெரு முயற்சியிலே கலைஞன் தன் ஆற்றலுக்கேற்றவாறு சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, வெற்றி பெறுகிறான். ஆனால், உள்ளத்தில் உணர்வதைப்போன்று எடுத்துக் காண்பிப்பது யாருக்கும் முழுமையாகக் கைகூடுவதில்லை. தலைசிறந்த கலைஞர்களின் கலை மந்திரக்கோலுக்குப் பிறருள்ளத்தில் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் வல்லமை உண்டெனினும், அது கலைஞனின் சொந்த உணர்ச்சி எல்லையை அணுகும் திறனுடையதல்ல.

உணர்த்த முடியாத உணர்ச்சிகளே மற்றவர்களுக்கு உணர்த்துவதில் கலைகளெல்லாவற்றிலும் நாட்டியமே முதல் இடம் பெறுகிறது. உணர்ச்சிகளைச் சொல்லாமல் சொல்லுவது அக்கலை; மெளனமே அதன் உயிர். உள்ளத்துடிப்பை உடலுறுப்புக்களால் காட்டி, அது பிறர் உள்ளத்திலும் புகுந்து மலரும்படி செய்யப் பரதம் முயல்கிறது. அபிநயவாயிலாக உள்ளத்தோடு உள்ளம் உணர்ச்சிகளைத் தொட்டுக் கொள்கின்றது; அங்கே பேச்சிற்கு இடமில்லை.

உள்ளத்தில் எழும் அலைகளின் கொந்தளிப்பை வெளிக்காட்டுவதில் இரண்டாவதாக இசையைத் தான் சொல்லவேண்டும். ஒரு பண்ணை ஆளத்தி செய்யும்போது கேட்போரின் சித்தக் கடலிலே உணர்ச்சிகள் அலைமோதுகின்றன. இராக சஞ்சாரத்தில் ஒரு பகுதியை விஸ்தரித்து நிறுத்திவிடும் போது ஏற்படும் மோனத்திலே உணச்சிகள் மிதந்து வந்து மனத்திலே படிகின்றன. அந்த மோனத்திலே