22
"என் கதை இன்றோடு முடிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன். இன்று யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அந்த அளவுக்கு."
அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் என்று தெரியவில்லை. நாட்டு நிலையைக் குறிப்பிடுகிறாள்.
"உனக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?"
"சரியான பயித்தியம் நீங்கள்" என்று கேட்டாள்.
என் மனைவி என்னை அரைப் பயித்தியம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்; இவள் என்னைச் சரியான பைத்தியம் என்று சொன்னாள்.
"அதுசரி முழுப்பயித்தியத்துக்கும் சரியான பயித்தியத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்ல முடியுமா?"
"என்னை அவ்வளவு விரைவாக வந்து ஒருவன் கலியாணம் செய்துகொண்டால் அவன் முழுப்பயித்தியம். எனக்கு அவ்வளவு சீக்கிரம் கலியாணம் ஆகிவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் நீங்கள் சரியான பைத்தியம்.”
நான் ஏன் அவசரப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டேன் என்று அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். அதாவது இதைப்போல ஒரு பெண்ணை ஆபத்துக் காலத்தில் காப்பாற்றி அதற்குப்பிறகு கலியாணம் செய்து கொண்டிருந்தால் நான் ஒரு ஹீரோ ஆகி இருப்பேன். அவள் என்னைப் பிரமாதமாக மதிப்பாள்.
"நீங்கள் சரியான சமயத்தில் வந்து காப்பாற்றினீர்கள் என்று பாராட்டுத் தெரிவித்துப் பிறகு அவள் அப்படியே தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விடுவாள். இது எனக்குத் தெரியும். அந்த மாதிரி நாடக நிகழ்ச்சியை நானும் எதிர்பார்த்தேன்.
"நீங்கள் ஏன் பண்ணிக்கொள்ளவில்லை” என்று கேட்டாள்.