40
சொந்தம் என்றால் ரொம்ப மகிழ்ச்சி; சொந்தம் என்ற சொல்லே இப்படித்தான் உண்டாகி இருக்க வேண்டும். "என் மனைவி எனக்குச் சொந்தம்' என்று பேசக் கேட்டு இருக்கிறேன். இந்த வீடு எனக்குச் சொந்தம் என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று கூறுகிறாள்.
என் மனைவி எனக்காகவே வாழ்கிறாள். அப்படித் தான் முன்னால் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ஒரு முறை ஒரு புதிய வியாபாரம் செய்யத் தொடங்கினேன். அதில் துணிந்து இருபதினாயிரம் போட்டேன். அதாவது கார் சாமான் கடை; அது ரொம்பவும் குறைவுதான். ஆனால் ‘லோன்’ வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னர்கள். வியாபாரமே அப்படித்தானே? நாம் பிறரிடம் கடன் வாங்குகிறோம். நாம் பிறருக்குக் கடன் தருகிறோம். பணத்தைப் புரட்டுகிறோம்; பிறகு பணம் புரள்கிறது. பிறகு அதற்கு உரியவன் அதில் புரள்கிறான்; புரட்சி என்று எதையோ சொல்கிறார்கள், இதை மறந்து விட்டு.
அன்று ஒரே சண்டை.“உங்களை யார் அதில் இறங்கச் சொன்னது? உங்களுக்குப் பின்னால் யார் அதைக் கவனித்துக் கொள்வார்கள்?” என்று கேட்டாள். நான் ஒரு நாள் கூட அப்படி நினைத்தது இல்லை . அவ்வளவு விரைவில் நான் இந்த உலகத்தை விட்டு ஏன் போகப் போகிறேன். என் மனைவிக்காகவாவது நான் வாழத்தான் வேண்டும்.
அவளுக்கு வைத்த பெயர் மாதவி; அவள் எனக்கு மதுவாகவே விளங்கினாள். அவளை 'மது' என்றே கூப்பிட்டேன். அவள் உமது விருப்பம் என்றாள்.
அவளோடு பழகுவது ஒரு புதிய அனுபவம். ஏன் கோவலன் மாதவியிடம் மயங்கினான்? ஆடல் பாடல் அழகு என்று சொல்லுகிறார்கள். அதுவல்ல காரணம். அவள் கண்ணகியை விட அறிவுடையவள். கண்ணகிக்கு உலகம் தெரியாது; வீடு மட்டும்தான் தெரியும். அவளை