7
அவள் சொன்னாள் “கலியாண மான பிறகு நீ காதலிக்கலாமா?” என்று கேட்டாள்.
“எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள்” என்றேன்.
அவள் கிட்டே மட்டும் அப்படிச்சொல்லி விட்டேன். அதனால்தான் அவள் என்னை அரைப்பயித்தியம் என்றாள். அதாவது ஆங்கிலத்திலே சொன்னால்'செமிகிராக்'.என்னைப் போல இப்படி அரைப் பயித்தியங்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? இருப்பார்கள். அவர்களை உங்களுக்குத் தெரியாது. என்னைப் பற்றி மட்டும் எப்படி உங்களுக்குத் தெரியும். நான் சொன்னதுக்கு அப்புறம் தானே தெரியும்.
எங்கள் சின்ன பையன்; அதுதான் முரளி. அப்படி என்றால் பெரிய பையன் இருக்கிறான் என்று நினைக்கிறீர்களா! அப்படி ஒன்றும் இல்லை. ஒரே பையன்தான். அவன் சின்னவன். அதனால் அவனைச் சின்ன பையன் என்று சொன்னேன். அவன், "அப்பா! நீ ஒரு பைத்தியம்" என்று அடிக்கடி சொல்லுவான்.
ஏன் இப்படிச் சொல்கிறான் எனக்குத் தெரியாது.
“ஏன்டா முரளி என்னைப் பையித்தியம் என்று சொல்றே” என்று கேட்கிறேன்.
“நீ அம்மா பேச்சு கேக்கறே” என்பான்.
“அம்மா பேச்சுக் கேட்டால் நான் பைத்தியமா?”
“நான் கேக்க மாட்டேன்”
அவன் சுதந்திரத்தைப் பார்த்து நான் ரொம்ப ஆச்சரியப் படுகிறேன்.
என் மனைவிக்கு நான் ரொம்பவும் அடங்கியவன். அவளும் அப்படித்தான் என்னைப் பற்றி அபிப்பிராயம் சொல்லிக் கொண்டு வருகிறாள்.