அருளும் பொருளும் 73
வயிர முடைய நெஞ்சு வேணும்-இது வாழும் முறைமையடி பாப்பா!
-பாப்பாப் பாட்டு : 16
என்றார் பாரதியார்.
அன்பின் வடிவமாகவே ஆண்டவன் அமர்ந்துள்ளான். என ஆன்றோர் உரைப்பர், 'அன்பே சிவம்' என்ற நிறை மொழியும் இதனையே விளக்கி நிற்கிறது. தவமுனிவராம் திருமூலரும்,
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
-திருமந்திரம் : 270
என்று குறிப்பிட்டுள்ளார். அன்பும் சிவமும் ஒன்றென்றும், அன்பினைக் கண்டார் சிவனைக் கண்டவராவர் என்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார் திருமூலர். எனவே அன்புருவாய் விளங்கும் ஆண்டவன் திருப்பெயரைச் சாற்றினால் தீவினைகள் தீரும்; பின் தேவ நிலை எய்திச் சிவகதி பெறலாம் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவ சிவ என்கிலர் தீவினை யாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே.
-திருமந்திரம் : 2716
இத்தகைய ஆராத அன்பின் முதிர்ந்த நிலையே அருள் என்பது. தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பரிவே அன்பெனப்படும்; தொடர்பில்லாதவர்மாட்டும்